கோவை சிறையில் 'கஞ்சா' வர்க்கி - கைதிகளுக்கு சப்ளை செய்ய முயன்ற வாலிபர் மீது அதிரடி வழக்கு !!!
தின்பண்டத்திற்குள் மறைத்து வைக்கப்பட்ட 6 கிராம் கஞ்சா ; சிறைத் துறை சோதனையில் சிக்கிய 4 பேர் !!!
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கைதிகளுக்கு, தின்பண்டங்களுக்குள் கஞ்சாவை மறைத்து வைத்துக் கொடுக்க முயன்ற சம்பவம் சிறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாகக் கைதிகள் உட்பட நான்கு பேர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
கோவை மத்திய சிறையில் மகேஸ்வரன், சுரேந்திரன் மற்றும் அபி விஷ்ணு ஆகிய மூவர் சிறைக் கைதிகளாக இருந்து வருகின்றனர். இவர்களைச் சந்திப்பதற்காகச் சின்ன தடாகம் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் கடந்த 12-ஆம் தேதி சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து இருந்தார். சந்திப்பிற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் நவீன் தனது நண்பர்களைப் பார்ப்பதற்காகச் சிறைக்கு வந்தார்.
அப்போது, கைதிகளுக்குக் கொடுப்பதற்காக வர்க்கி மற்றும் சில தின்பண்டங்களை நவீன் கொண்டு வந்து இருந்தார். "இவற்றை மகேஸ்வரனிடம் கொடுத்து விடுங்கள்" எனக் கூறி சிறைக் காவலரிடம் தின்பண்டப் பைகளை ஒப்படைத்து விட்டு அவர் அங்கு இருந்து சென்று உள்ளார்.
சிறை விதிமுறைப்படி, கைதிகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அப்போது, அந்தப் பையில் இருந்த வர்க்கி (Varkey) பாக்கெட்டுகளைச் சோதனை செய்த போது, காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வர்க்கிக்குள் வைக்கப்பட்டு இருந்த 6.24 கிராம் கஞ்சா சிக்கியது. உடனடியாக இது குறித்து சிறை ஜெயிலர் திருமலை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில், கஞ்சா சப்ளை செய்ய முயன்ற நவீன் மற்றும் கஞ்சாவைப் பெற முயன்ற கைதிகள் மகேஸ்வரன், சுரேந்திரன், அபி விஷ்ணு ஆகிய நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறைச் சாலைக்குள் போதைப்பொருள் கொண்டு செல்ல முயன்ற இந்தத் துணிகரச் சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: