சனி, 30 மே, 2026

மின்னொளியில் ஜொலிக்கும் வாலிபால் கிரவுண்ட் ; கோவையில் புதுப்பிக்கப்பட்ட கைப்பந்து மைதானம் திறப்பு !!!

SHARE

மின்னொளியில் ஜொலிக்கும் வாலிபால் கிரவுண்ட் ; கோவையில் புதுப்பிக்கப்பட்ட கைப்பந்து மைதானம் திறப்பு !!!

​ரூ.6 லட்சம் மதிப்பில் மெகா மின்விளக்கு வசதி; பரபரப்பான கண்காட்சி போட்டியில் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் பள்ளி அணி வெற்றி!

கோவை சோமையம்பாளையம் யமுனா நகரில் அமைந்துள்ள ஆர்.ஜி. ஸ்போர்ட்ஸ் அகாடமியில், புதுப்பிக்கப்பட்ட மின் ஒளி வசதியுடன் கூடிய கைப்பந்து மைதானத்தின் திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றது.

கோவை சோமையம்பாளையம் யமுனா நகரில் அமைந்துள்ளது ஆர்.ஜி. ஸ்போர்ட்ஸ் அகாடமி. இங்கு சுற்றுப்பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த விரர்கள் கைப்பந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இங்கு மாவட்ட, மாநில அளவிலான கைப்பந்து போட்டிகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இரவிலும் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் வகையிலும், போட்டிகள் நடத்தும் வகையிலும் மைதானத்தை சுற்றி சுமார் 6 லட்சம் மதிப்பில் மின் ஒளி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட மின் ஒளி வசதியுடன் கூடிய கைப்பந்து மைதானத்தின் திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கிராமப்புற கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவனர் எஸ்.ஆர். ஆறுச்சாமி தலைமை தாங்கி நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கோவை வருமான வரித்துறையின் உதவி ஆணையர் ஆர். ஆனந்தி, ஐ.ஆர்.எஸ்., கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட மின் ஒளி வசதியுடன் கூடிய கைப்பந்து மைதானத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். 

மரியாதை விருந்தினராக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஓய்வுபெற்ற துணைப் பொது மேலாளர் ஆர். ராஜமகேந்திரன் பங்கேற்று விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.

மேலும், அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஏ. ராஜசேகர், அறங்காவலர்கள் ராமையா சுரேஷ்குமார், ஆர்த்தி ராஜசேகர், ரக்‌ஷிதா ஆகியோர் கலந்து கொண்டனர். வருமான வரித்துறையின் ஓய்வுபெற்ற அதிகாரிகள் நாகராஜ், வெங்கட்ராமன், எஸ்.பி.ஐ. ஒஸ்வான், பேராசிரியர் சாமுவேல் குட்டியப்பன், அகர்வால் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பிரவீன்குமார் வருண் மற்றும் திருப்பூர் மாவட்ட கைப்பந்து கழகத்தின் கௌரவ செயலாளர் தங்கமணி குமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

விழாவை முன்னிட்டு நடைபெற்ற கண்காட்சி கைப்பந்து போட்டியில் எம்.எச்.எஸ்.எஸ். அணியும், பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மேல்நிலைப்பள்ளி அணி 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

நிகழ்ச்சியின் முடிவில் ஆர்.ஜி. ஸ்போர்ட்ஸ் அகாடமியின் ஒருங்கிணைப்பாளர் கே. தனலட்சுமி நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் விளையாட்டு ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: