பல்சர் வேண்டாம், புல்லட் தான் வேணும்! கோவையில் அரங்கேறிய ‘விசித்திர’ பைக் திருட்டு; அசந்துபோன பீளமேடு போலீசார்!
திருடிய வண்டியை அதே இடத்தில் ரிட்டர்ன் செய்த ‘சரக்கு’ திருடர்கள்: சி.சி.டி.வி காட்சிகளால் கோவையில் பரபரப்பு !!!
கோவை கோல்ட்வின்ஸ் பகுதியில் அதிகாலை நேரத்தில் நடைபெற்ற வினோதமான பைக் திருட்டு சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 21 ஆம் தேதி ஸ்கூட்டியில் வந்த இரண்டு பேர், ஒரு வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டு இருந்த இரண்டு பைக்குகளை கவனித்து பார்த்து உள்ளனர். அதில் ஒரு பல்சர் பைக்கின் லாக்கை உடைத்து, வயரிங் மூலம் ஸ்டார்ட் செய்து திருடிச் சென்று உள்ளனர்.
இதன் பின்னர், சுமார் ஒரு மணி நேரம் கழித்து, அதே நபர்கள் மீண்டும் சம்பவ இடத்துக்கு திரும்பி உள்ளனர். அப்போது, ஒருவருக்கு ராயல் என்ஃபீல்ட் பைக் மற்றும் மற்றொருவருக்கு முன்னர் திருடப்பட்ட பல்சர் பைக் இருந்துள்ளது.பின்னர் திருடப்பட்ட, பல்சர் பைக்கை மீண்டும் அதே இடத்தில் நிறுத்திவிட்டு, இருவரும் ராயல் என்ஃபீல்டில் தப்பிச் சென்று உள்ளனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ராயல் என்ஃபீல்டு பைக்கும் திருடப்பட்ட வாகனம் என்பதும், பெரிய மற்றும் விலை உயர்ந்த பைக் கிடைத்ததால் பல்சர் பைக்கை கைவிட்டுச் சென்றதும் தெரியவந்து உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த நபர்களை தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்: