இன்ஸ்டாகிராம் காதலி விவகாரத்தில் ‘ஸ்கெட்ச்’... புகைப்படக் கலைஞர் கொலையில் இளம் பெண் அதிரடி கைது: தற்கொலை நாடகத்தை உடைத்த போலீஸ் - திண்டுக்கல்லுக்கு மாறும் வழக்கு !
லண்டனில் இருந்து வந்து கயிற்றால் நெரித்துக் கொன்ற காதலன்; தண்டவாளத்தில் உடலை வீசி ‘ரூட்’ மாற்றிய பயங்கரம் - ஒட்டன்சத்திரம் போலீஸ் வசம் ஒப்படைக்க முடிவு !
கோவை மாவட்டம், தடாகம் அருகே உள்ள மடத்துறை சேர்ந்தவர் பிரவீன் (வயது 26) புகைப்பட கலைஞர் மற்றும் கிரிக்கெட் வீரரான இவர் கடந்த ஜூலை முதல் வாரத்தில் திடீரென்று மாயமானார்.
திண்டுக்கல் அருகே வீடியோ சூட்டிற்கு செல்வதாக குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்துவிட்டு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் தடாகம் போலீஸ் நிலையத்தில் மகனை காணவில்லை என புகார் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் போத்தனூர் அருகே ரயில் தண்டவாளம் பகுதியில் உடல் துண்டான நிலையில் ஒரு வாலிபரின் உடல் கிடந்தது. இதை போத்தனூர் ரயில்வே போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது இறந்த வாலிபர் பிரவீனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவர் ரயில் மோதி இறக்கவில்லை அவரை சிலர்கொலை செய்து தண்டவாளத்தில் வீசி ரயில் மோதி இறந்தது போல் வழக்கை திசை திருப்ப முயற்சி செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டனர்.
இந்த நிலையில் கரூரைச் சேர்ந்த மனோஜ் மற்றும் அவரது நண்பர் கார்த்திகேயன் ஆகியோர் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தனர். புகைப்பட கலைஞர் பிரவீனை கடத்தி கொலை செய்ததாக அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக போத்தனூர் ரயில்வே போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது இங்கிலாந்து நாட்டில் வேலை பார்த்து வந்த மனோஜ் கோவை தடாகம் பகுதியில் உள்ள ஒரு இளம் பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து உள்ளார்.4 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் அந்த இளம் பெண்ணுக்கு பிரவீன் உடனும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் மனோஜ் உடன் அந்த இளம் பெண் பேசுவதை குறைத்து உள்ளார்.. இதனால் மனோஜ் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பி வந்தார். தனது இன்ஸ்டாகிராம் காதலியை பிரித்தது பிரவீன் என தெரிந்ததும் அவரை போட்டோ சூட்டுக்கு அழைத்து செல்வது போல் காரில் அழைத்துச் சென்று அவரது கழுத்தை கயிறு மூலம் இறக்கி கொலை செய்துவிட்டு, உடலை போத்தனூர் அருகே தண்டவாளத்தில் வீசி தற்கொலை செய்தது போல் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போத்தனூர் ரயில்வே போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதன் பிறகு இறந்த பிரவீன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கு இடையே இந்த வழக்கில் பிரவீன் கொலை செய்யப்பட்டது தெரிந்தும் போலீசாரிடம் மறைத்ததாக சம்பந்தப்பட்ட இளம் பெண்ணையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.
விரைவில் இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தடாகம் போலீஸ் நிலையத்தில் பிரவீன் மாயமான வழக்கும், போத்தனூர் ரயில்வே போலீஸ் நிலையத்தில் பிரவீன் உடல் மீட்கப்பட்டது தொடர்பான சந்தேக மரணம் வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கு இடையே பிரவீன் கொலை செய்யப்பட்டது திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட இடம் என்பதால் விரைவில் கொலை வழக்கு ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட உள்ளது.
அதன் பிறகு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

0 கருத்துகள்: