வியாழன், 9 ஜூலை, 2026

உடற்கூராய்வுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரிய வழக்கு - தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு !!!

SHARE

 உடற்கூராய்வுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரிய வழக்கு - தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு !!!

குற்ற வழக்குகளில் தடயவியல் மற்றும் உடற்கூறு ஆய்வுகளுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மதுரை ஊத்தங்குடியை சேர்ந்த வழக்கறிஞர் அருண் சாமிநாதன் தாக்கல் செய்து உள்ள பொதுநல மனுவில், 'அரசு மருத்துவமனைகளில் தடயவியல் மற்றும் உடற்கூறு ஆய்வுகள் நடத்துவதில் தொடர்ச்சியாக முறைகேடுகள் நடந்து வருவதாகவும், இது குற்ற வழக்கு புலன்விசாரணையிலும், மருத்துவ ஆதாரங்களை பாதுகாப்பதிலும் பிரச்சனையை ஏற்படுத்துவதாகவும்' குறிப்பிட்டு உள்ளார்.

ஏற்கனவே, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் அறிவியல் அலுவலர் நியமிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு 2020 ஆம் ஆண்டில் உத்தரவு பிறப்பித்து இருந்தும், அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எதையும் அரசு மேற்கொள்ளவில்லை என மனுவில் குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும், இந்த மருத்துவ ஆதாரங்கள் சேகரிப்பதில் பல குறைபாடுகள் உள்ளன. உடற்கூராய்வுக்குப் பிறகு தவறான உடலை உறவினர்களிடம் ஒப்படைத்த சம்பவங்களும் நடந்து உள்ளன. இன்னும் சில நிகழ்வுகளில் மரணம் அடைந்து விட்டதாக சான்றிதழ் அளிக்கப்பட்ட நபர்கள், பின்னர் உயிருடனும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளார்கள் என்றும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

அதுமட்டுமின்றி, அரசு மருத்துவமனை பிணவறைகளில் அடையாளம் காணப்படாத உடல்கள் ஆண்டுக் கணக்கில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றும், தற்போது வரை தமிழ்நாட்டில் தடயவியல், உடற்கூராய்வு நடைமுறைகளுக்கு ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் இல்லை எனவும் மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

தடயவியல் ஆதாரங்கள், குற்ற நீதி பரிபாலனத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, மருத்துவ ஆதாரங்களை சேகரிப்பதிலும், பாதுகாப்பதிலும் குறைபாடுகள் எழுந்தால் அது பாதிக்கப்பட்டவர்களுக்கும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதால், குற்ற வழக்குகளில் தடயவியல் மற்றும் உடற்கூறு ஆய்வுகளுக்கு தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, வழக்கு குறித்து 3 வாரங்களில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: