கோவையில் செமி கண்டெக்டர் பூங்கா வருவது நிச்சயம் - அமைச்சர் கீர்த்தனா உறுதி !!!
மத்திய அரசு ஒத்துழைப்புடன் செயல்பட்டு, கோவைக்கு செமி கண்டெக்டர் பூங்கா கொண்டு வரப்படும் என்று தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்து உள்ளார்.
அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) தென்னிந்திய மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம், ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இந்திய தொழில் கூட்டமைப்பினர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தொழில்துறையின் தற்போதைய நிலை, வளர்ச்சிக்கான திட்டங்கள், இரு மாநிலங்கள் சேர்ந்து எவற்றில் கவனம் செலுத்துவது என்பன குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீர்த்தனா,
”இதில் பங்கேற்ற தொழில்துறையினர் அடிப்படை வசதிகள் வேண்டுமென்று கேட்டுக் கொண்டு உள்ளனர். எடுத்துக் காட்டாக சிப்காட் தொழிற்சாலை அமைக்கும் பட்சத்தில் அதற்கான சாலை வசதிகள், மின்சார வசதிகள், தண்ணீர் வசதிகள் ஆகியவை வேண்டும். அந்த வகையில் அடிப்படை தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் அரசாகவும், வெளிப்படையான அரசாகவும் த.வெ.க விளங்கும் என்று உறுதி அளித்து உள்ளோம்," என்றார்.
மேலும் பேசிய அவர், "கோயம்புத்தூரை பொறுத்தவரை விமான நிலையம் விரிவாக்கம் என்பது தொழில் துறையினரின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. அதற்காக பிரத்யேக குழு அமைக்கப்பட்டு உள்ளது, இம்முறை கண்டிப்பாக கோயம்புத்தூர் விமான நிலையம் விரிவாக்கம் நடைபெறும்” என்றார்.
சோலார் திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கீர்த்தனா, ”கருவேலமரங்கள் உள்ள இடங்களில் சோலார் அமைத்தால் பயன் உள்ளதாக இருக்கும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்றார்.
தமிழ்நாட்டில் மட்டும் சோலாருக்கு 1% கட்டணம் வாங்கப்படுவது குறித்த கேள்விக்கு, ”அந்த துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று பதிலளித்தார்.
சிறு, குறு, தொழில் மேம்பாடு குறித்த கேள்விக்கு, “சிறு, குறு தொழில் மேம்பாட்டிற்கு தனி கமிட்டி அமைக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில்,
"கடந்த காலங்களை போல் அல்லாமல், 100% புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் செயல்படுத்த வேண்டும் என்பது தான் இந்த அரசின் நோக்கம். புரிந்துணர்வு கையெழுத்தை வெறும் பேப்பரில் போட்டு விட்டு வந்து விடக் கூடாது. இங்கு உள்ள இளைஞர்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்லாமல் தமிழ்நாட்டில் தொழில் செய்ய வேண்டும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
கோயம்புத்தூரில் வர வேண்டிய செமி கண்டெக்டர் பூங்கா குஜராத்திற்கு சென்றுவிட்டதா? மத்திய அரசுடன் இணைந்து எவ்வாறு அதனை கொண்டு வரப் போகிறீர்கள்? என்ற கேள்விக்கு, ”மத்திய அரசு ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறோம். கண்டிப்பாக கோயம்புத்தூருக்கு செமி கண்டெக்டர் பூங்கா கொண்டு வரப்படும்” என்று அமைச்சர் பதில் அளித்தார்.

0 கருத்துகள்: