கோவை, ராமநாதபுரம் - நஞ்சுண்டாபுரம் சாலையில், வாகனம் மோதி நடுரோட்டில் ஆபத்தான முறையில் அறுந்து விழுந்த போலீஸ் கண்காணிப்பு கேமரா ஒயர்களை, ஊழியர்களுக்காகக் காத்து இருக்காமல், சரி செய்த கோவை, ராமநாதபுரம் பகுதி போலீஸாரின் மக்கள் சேவை தற்பொழுது சமூக வலைதளங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
கோவை, மாநகரின் மிக முக்கியப் பிரதான சாலைகளில் ஒன்றான ராமநாதபுரத்தில் இருந்து நஞ்சுண்டாபுரம் செல்லும் சாலையில் இந்த சாலையில் அதிகப்படியான வாகனப் போக்குவரத்து இருந்தது. அப்போது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத ஒரு பெரிய வாகனம், சாலையில் உயரத்தில் இருந்த போலீஸ் சி.சி.டி.வி (CCTV) கண்காணிப்பு கேமராவின் கேபிள்கள் மீது பலமாக மோதி உள்ளது.
இதில், கேமராவிற்குச் செல்லும் ஒயர்கள் அனைத்தும் மேல் இருந்து அவிழ்ந்து, சாலையின் குறுக்கே ஆபத்தான முறையில் தொங்கியபடி கீழே விழுந்தன. இதனால் அந்தச் சாலையில் வந்த பேருந்துகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் போக்குவரத்தும் இடையூறாக இருந்தது.
ஒயர்கள் அவிழ்ந்து விழுந்ததால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவியதை உணர்ந்த அருகில் இருந்த பொதுமக்கள், உடனடியாக இதுகுறித்து கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு அவசரத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ராமநாதபுரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் விரைந்து வந்தனர்.
பொதுவாக இதுபோன்ற கேபிள் ஒயர்களைச் சரி செய்யத் தொழில் நுட்ப ஊழியர்களை வரவழைப்பது தான் வழக்கம். ஆனால், அவர்கள் வந்து சேர எப்படியும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகும் என்பதால், அதுவரை பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனக் கருதி பொதுமக்களின் பாதுகாப்பும், போக்குவரத்தைச் சீரமைப்பதுமே முக்கியம்” என முடிவெடுத்த ராமநாதபுரம் காவலர்கள், தொழில்நுட்ப ஊழியர்களுக்காகக் காத்து இருக்காமல் தாங்களாகவே களமிறங்கினர்.
அங்கு கீழே அவிழ்ந்து கிடந்த கனரக ஒயர்கள் அனைத்தையும் மேலே இழுத்து, கட்டும் பணியில் ஈடுபட்டனர். காவலர்களின் இந்த அதிரடி மற்றும் துரித நடவடிக்கையால், சில நிமிடங்களிலேயே ஒயர்கள் அனைத்தும் மேலே கட்டப்பட்டு, அந்தச் சாலையில் போக்குவரத்து முழுமையாகச் சீரமைக்கப்பட்டது.
காவலர்களின் இந்தத் சேவையைக் கண்ட அங்கு இருந்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தங்களது செல்போன்களில் இதனைப் பதிவிட்ட பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

0 கருத்துகள்: