செவ்வாய், 19 மே, 2026

ஐ.நா நினைத்தால் மட்டுமே இலங்கை இனப்படுகொலை விவகாரத்தில் தீர்வு காண முடியும் - திருமாவளவன் !!!

SHARE

 ஐ.நா நினைத்தால் மட்டுமே இலங்கை இனப்படுகொலை விவகாரத்தில் தீர்வு காண முடியும் - திருமாவளவன் !!!

இலங்கை இனப்படுகொலை விவகாரத்தில் ஐ.நா சபை நினைத்தால் மட்டுமே தீர்வு காணவும்; குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர முடியும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

சென்னை அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் திடலில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மே 17 தமிழீழ இனப்படுகொலை நாள் மற்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வி.சி.க தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன், சட்டப்பேரவை உறுப்பினர் வன்னி அரசு, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ஜுனா ஆகியோர் கலந்து கொண்டு நினைவேந்தல் உறுதிமொழி எடுத்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

அப்போது மேடையில் பேசிய திருமாவளவன், "நான் பெரிதும் நேசிக்கும் தேசிய தலைவன் பிரபாகரன். அவர் உயிரோடு உள்ளார் எனும் நம்பிக்கை ஒருபுறமும், இல்லை என்ற எண்ணம் மற்றொரு புறமும் உள்ளது. அவருடன் இரண்டு முறை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்து உள்ளது. அவர் எனக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார். குறிப்பாக, திருமணம் செய்து கொள்ள சொன்னார். இதேபோல், கோழிக்கறி சாப்பிடவும் சொன்னார். ஆனால், நான் அசைவ உணவு சாப்பிட மாட்டேன் என மறுத்து விட்டேன்.

இலங்கையில் நடந்த இனப்படு கொலைக்கு காரணமான ராஜபக்சே உட்பட அவருடைய குடும்பத்தில் யாரும் தண்டிக்கப்படவில்லை. இலங்கை இனப்படு கொலைக்கு எதிராக வாக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்றால், அது ஐ.நா சபையால் மட்டுமே முடியும். ஐ.நா சபை நினைத்தால் மட்டுமே இதில் தீர்வு காண முடியும். தமிழீழம் என்பது எங்களுடைய கனவு. அ.தி.மு.க தமிழீழ விடுதலை இயக்கங்களை புறக்கணித்து விட்டார்கள். ஆனால், சட்டமன்றத்தில் தன்னுடைய முதல் கன்னி பேச்சிலேயே வன்னியரசு, ஈழம் குறித்து பேசி உள்ளார்" என்றார்.

இதேபோல், கூட்டத்தில் கலந்துக் கொண்ட வி.சி.க துணை பொது செயலாளர் வன்னியரசு பேசுகையில், "சட்டமன்றத்தில் ஈழம் குறித்த முழக்கம் இருக்க வேண்டும் என வி.சி.க தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தி உள்ளார். இதன்படி ஈழம் குறித்து பேசினேன். அது நானாக பேசியது கிடையாது. அனைத்து புகழும் திருமா-வையே சேரும்.

இலங்கையில் விடுதலை புலிகள் தடை செய்யப்பட்டு உள்ளது போல், இங்கேயும் தடை செய்யப்பட்டு உள்ளது. இருந்தாலும் எங்கள் தமிழ் உறவுகளுக்கு மரியாதை செலுத்துவோம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து பேசினால், அவர்கள் மீது தடா சட்டம் பாயும் என கூறினார். இருப்பினும் பிரபாகரனை பற்றி பேசுவேன் என திருமா கூறினார். திருமா எதை பேசினாலும் அதை அவதூறாக சித்தரிக்கும் பல்வேறு தற்குறிகள் உள்ளனர்" என்று கூறினார்.

முன்னதாக கூட்டத்தில் கலந்துக் கொண்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ஜுனா பேசுகையில், "இங்கும் புலி வாழ்கிறது என்றால் அது திருமாவளவனால் தான். திருமா உங்களுக்கு தலைவர். ஆனால், எனக்கு அவர் தேசிய தலைவர். இலங்கையை பொருத்தவரை தடை செய்யப்பட்ட இயக்கத்தினரின் புகைப்படம் முன் நின்று பேசுவது குற்றம். எனவே, இலங்கையில் நான் நாளை கைது செய்யப்படலாம். ஆனால் நான் பூனை அல்ல புலி. புலிகள் ஒருபோதும் தடம் மாறாது" என தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: