செவ்வாய், 19 மே, 2026

இலங்கை இறுதிக்கட்ட போரும், தமிழ்நாடு முதல்வர்களின் தமிழீழ மக்கள் ஆதரவும் !!!

SHARE

 இலங்கை இறுதிக்கட்ட போரும், தமிழ்நாடு முதல்வர்களின் தமிழீழ மக்கள் ஆதரவும் !!!

கடந்த காலங்களில் தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்கள் யாராக இருந்தாலும் இலங்கை விவகாரத்தில் ஈழத் தமிழர்களை ஆதரித்தவர்களாகவே இருந்து உள்ளனர். அவர்களின் வரிசையில் தற்போது விஜய் இணைந்து உள்ளார்.

கடந்த 2009- ஆம் ஆண்டு இலங்கையில் இறுதிக்கட்ட உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்றது. இதில் இலங்கை தமிழீழ மக்களை இலங்கை ராணுவம் கொடூரமாக கொன்றது. சுமார் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இந்த இனப் படுகொலையை நினைவு கூரும் விதமாக ஆண்டுதோறும் மே 18-ஆம் தேதி முள்ளிவாய்க்கால் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனுசரித்து வருகின்றனர்.

இந்த நாளிலும் ஈழத்தில் உள்ள தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்றும், இலங்கை அரசமைப்பில் தமிழர்களுக்கு முழுமையான உரிமைகள் இல்லை எனவும், தமிழீழ ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இலங்கை போரைக் கண்டித்தும், தமிழீழ மக்களுக்கு ஆதரவாகவும் தமிழ்நாடு எப்போதும் ஒரே குரலாகவே இருந்து இருக்கிறது. கடந்த காலத்தில் தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்கள் யாராக இருந்தாலும் இலங்கை விவகாரத்தில் ஈழத் தமிழர்களை ஆதரித்தவர்களாகவே இருந்து உள்ளனர்.

கடந்த காலத்தைப் பார்க்கும் போது 2009-இல் இலங்கை போர் உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில் போரை நிறுத்த கோரி அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவரது போராட்டம் பேசும்பொருளாக இருந்தது. அதை அடுத்து இலங்கை அரசு மத்திய அரசிடம் போரை நிறுத்துவதாக உறுதி அளித்ததை அடுத்து கருணாநிதி உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

அதேபோல் கடந்த 2015- ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, இலங்கையில் நடைபெற்ற ஈழப் போரில் இனப்படுகொலைக்கு காரணமான அனைவர் மீதும் சர்வதேச விசாரணை நடத்தும் வகையிலான தீர்மானத்தை இந்தியா ஐநா சபையில் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து கடந்த 2021- ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசுகையில், 

"இலங்கை தமிழர்கள் அகதிகள், அனாதை அல்ல, நாங்கள் இருக்கிறோம். இனி இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாம் என்று கூறாமல், அவற்றை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என கூற வேண்டும்" என சட்டமன்றத்தில் அறிவித்து இருந்தார்.

இதேபோல் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

தமிழீழ இனப்படு கொலையைக் கண்டித்து 17-ஆம் ஆண்டாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்று முள்ளிவாய்க்கால் தினத்தை அனுசரித்து வருகின்றனர். இந்நாளில் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முள்ளிவாய்க்கால் நினைவுத் தினம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் 'முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்!' என குறிப்பிட்டு உள்ளார்.

ஏற்கனவே 2008-ஆம் ஆண்டு விஜய், இலங்கை இனப்படுகொலைக் கண்டித்து சென்னையில் தனது ரசிகர்களுடன் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தரும் அடிப்படையில் எந்த பொறுப்பிற்கும் வராத போதே விஜய் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்நாட்டை ஆள்பவர்கள் யாராக இருந்தாலும், ஈழத் தமிழர்களின் ஆதரவாகவே செயல்படுவர். தமிழ்நாட்டு மக்களும், ஈழத்தமிழர்களும் தொப்புள்கொடி உறவுகள் போல் இருப்பதன் காரணமாக ஈழத்தமிழருக்கு எதிரான விவகாரம் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை மாற்றிவிடும் என்பதால் அதற்கு இடம் தராமல் தமிழ்நாட்டை ஆண்ட அனைத்து முதலமைச்சரும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவே இந்நாள் வரை செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: