பிரபல நடிகை தீபாவின் தந்தை மீது கொலைவெறி தாக்குதல்: 3 பேர் கைது !!!
பிரபல திரைப்பட நடிகை தீபாவின் தந்தை அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பகுதியில் உள்ள மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் புலவர் கணேசன் (72). இவர் பிரபல சினிமா மற்றும் டிவி சீரியல் நடிகை தீபாவின் தந்தை ஆவார். இவர் தூத்துக்குடி மாநகர் 57 வது வார்டு காங்கிரஸ் தலைவராகவும், முத்தையாபுரம் பகுதியில் பத்ரகாளி அம்மன் கோயில் தர்மகர்த்தாகவும் இருந்து வருகிறார். மேலும் இந்த கோயிலில் சிறந்த நிர்வாகத்தை வழங்கியதற்காக பாராட்டும் பெற்றவர்.
மேலும் கோயில் அருகே காமராஜருக்கு சிலை அமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கோயில் நிர்வாகம் மற்றும் காமராஜர் சிலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள அவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முத்தையாபுரம் பஜாரில் உள்ள டீக்கடை முன்பாக புலவர் கணேசன் நின்று கொண்டு இருந்த போது, திடீரென்று அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் சிலர், கைகளில் அரிவாளுடன் பாய்ந்து வந்து புலவர் கணேசனை சரமாரியாக வெட்டி உள்ளனர்.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். சிலர் ஓடி வந்து அந்த கும்பலை பிடிக்க முற்பட்ட போது, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கு இருந்து தப்பிச் சென்று விட்டனர். தொடர்ந்து, தலை, கால் உட்பட பல்வேறு இடங்களில், வெட்டுக் காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த புலவர் கணேசனை மீட்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சார்ந்த முத்துராஜ், கார்த்தி, இசக்கி ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகை தீபா சின்னத்திரையில் பல்வேறு தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர். 'மாயாண்டி குடும்பத்தார்' திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான தீபா, கடைக்குட்டி சிங்கம், மண்டேலா, டாக்டர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து உள்ளார்.

0 கருத்துகள்: