அண்டை மாநிலத்தில் அதிரடி கிளப்பும் 6-ஆம் வகுப்பு சிறுமி: ‘பள்ளிகளில் கட்டாய நீச்சல் பயிற்சி’ – ரனா பாத்திமாவின் போராட்டம் வெல்லுமா?
3 வயதில் ஆற்றில் நீந்தி வைரல்; ராகுல் காந்தி முதல் பினராயி விஜயன் வரை திரும்பிப் பார்க்க வைத்த கேரளச் சிறுமியின் !!!
பள்ளிகளில் கட்டாய நீச்சல் பயிற்சி : ரனா பாத்திமாவின் தொடர் முயற்சி வெற்றி பெறுமா?
நீர்நிலைகளில் குழந்தைகள் மூழ்கி உயிரழக்கும் சம்பவங்களை தடுக்கும் வகையில் கேரள மாநில பள்ளிகளில் கட்டாய நீச்சல் பயிற்சி வழங்கவேண்டும் என்ற மாணவி ரனா பாத்திமாவின் கோரிக்கை மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
யார் இந்த ரனா பாத்திமா?
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் அருகே தோட்டுமுக்கம் அரசு யு.பி. பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருபவர் ரனா ஃபாத்திமா. ரபீக் தோட்டுமுக்கம் மற்றும் ரிபானா ரபீக் தம்பதியின் மகளான இவர் தனது ஐந்து வயது முதலே பள்ளிகளில் கட்டாய நீச்சல் பயிற்சியை வழங்கவேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய முதல்வர் பின்ராயி விஜயனை சந்தித்து அனைத்து மாணவ, மாணவிகளும் நீச்சல் பயிற்சி பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது தேசிய அளவில் கவனம் ஈர்த்திருந்தது.
தற்போது புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில், பள்ளி மாணவர்களின் உயிர் பாதுகாப்பை மையமாகக் கொண்ட இந்த முயற்சி மீண்டும் மாநிலம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது.
ஐந்து வயதில் தொடங்கிய கோரிக்கை இது ரனாவின் முதல் முயற்சி அல்ல.
2023 நவம்பரில் நடைபெற்ற நவகேரள சதஸ் நிகழ்ச்சியின்போது, அப்போதைய கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து, "குழந்தைகள் நீந்தக் கற்றுக்கொள்ள முக்கம் பகுதியில் ஒரு நீச்சல் குளம் அமைக்க வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
அந்த நிகழ்வில் பங்கேற்ற மிகவும் இளம் வயது விருந்தினராக ரனா கவனம் பெற்றார். தனது நீச்சல் பயிற்சி குருவும் பாட்டியுமான ரம்லா மனாஃபுடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், முதலமைச்சரிடம் மனு அளித்ததோடு மட்டுமல்லாமல், அமைச்சர்களின் சிறப்பு நவகேரள பேருந்தின் உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர்களான வி. அப்துரஹ்மான், பி. பிரசாத் மற்றும் வீணா ஜார்ஜ் ஆகியோர் ரனாவை அழைத்துச் சென்று பேருந்தை சுற்றிக்காட்டிய சம்பவம் அப்போது ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது.
எனினும், அவரது கோரிக்கையின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குடும்பத்தினர் கூறுகின்றனர்.
மூன்றாவது வயதிலேயே வைரலான நீச்சல் திறமை
தோட்டுமுக்கத்தைச் சேர்ந்த ரனா ஃபாத்திமா, மூன்றாவது வயதிலேயே அப்பகுதியில் உள்ள சிறுபுழா ஆற்றில் நீந்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதன் மூலம் மாநிலம் முழுவதும் அறியப்பட்டார்.
மற்ற குழந்தைகள் நீருக்கருகே செல்லத் தயங்கும் வயதில், ஆற்றைக் கடந்து நீந்திய அவரது திறமை பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அந்தக் காணொளிகள் வெளியான பிறகு, பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் அரசு அதிகாரிகளின் கவனமும் அவர்மீது திரும்பியது.
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பாராட்டு
ரனாவின் திறமையைப் பாராட்டியவர்களில் முக்கியமானவர் காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி. அவர் நேரில் சந்தித்து ரனாவை வாழ்த்தியதுடன், அவரது தன்னம்பிக்கையையும் திறமையையும் பாராட்டியதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
முக்கம் நகராட்சி, குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுத்தருவதற்காக முன்னெடுத்த "நீந்தி வா குழந்தைகளே" திட்டத்தின் பிராண்ட் அம்பாசிடராக ரனாவை நியமித்தது.
அந்த நேரத்தில் நகராட்சி நிர்வாகமும் பல்வேறு மக்கள் பிரதிநிதிகளும், நீச்சல் திறனை ஒரு உயிர்காக்கும் திறனாக மாற்றிய சிறுமியின் முயற்சியை பாராட்டியிருந்தனர்.
நவகேரள சதஸ் நிகழ்வில் முதலமைச்சர் பினராயி விஜயனும், அமைச்சர்களான வி. அப்துரஹ்மான், பி. பிரசாத் மற்றும் வீணா ஜார்ஜும் ரனாவுடன் உரையாடிய சம்பவம் செய்திகளில் இடம்பிடித்தது.
"ஒவ்வொரு பள்ளியிலும் நீச்சல் பயிற்சி தேவை"
ஆரம்பத்தில் முக்கம் பகுதியில் ஒரு நீச்சல் குளம் வேண்டும் என்பதே ரனாவின் கோரிக்கையாக இருந்தது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளில் கேரளாவின் பல பகுதிகளில் குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்ததைத் தொடர்ந்து, தனது கோரிக்கையை மாநில அளவிற்கு விரிவுபடுத்தி உள்ளார்.
"ஒவ்வொரு குழந்தைக்கும் நீந்தத் தெரிய வேண்டும். பள்ளிகளில் நீச்சல் பயிற்சி கட்டாயமாக்கப்பட வேண்டும்" என்பதே தற்போது அவர் முன்வைக்கும் முக்கிய கோரிக்கையாகும்.
பள்ளியிலேயே பயிற்சி அளிக்கத் தயாராகும் சிறுமி மனு கொடுத்து விட்டு காத்து இருப்பதில் மட்டும் ரனா நின்று விடவில்லை.
தனது பள்ளியில் நீச்சல் தெரியாத சக மாணவர்களுக்கு நீச்சல் கற்றுத்தருவதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். பள்ளி மாணவர்களிடையே நீச்சல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அவரது குடும்பம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
நீரில் மூழ்கி உயிரிழப்பது அதிகரிக்கிறது
கேரளாவில் ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் அதிகம் உள்ள பகுதிகளில் கோடை விடுமுறை மற்றும் பருவமழைக் காலங்களில் குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.
பொது சுகாதார மற்றும் பேரிடர் மேலாண்மை நிபுணர்கள், நீச்சல் பயிற்சி மற்றும் அடிப்படை நீர் பாதுகாப்பு கல்வி பள்ளி மட்டத்திலேயே வழங்கப்பட வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
பல நாடுகளில் பள்ளி மாணவர்களுக்கு கட்டாய நீச்சல் பயிற்சி வழங்கப்படுவது போல, கேரளாவிலும் அதுபோன்ற நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்ற விவாதம் சமீப ஆண்டுகளில் வலுப்பெற்றுள்ளது.
அதேபோல், ரனா பாத்திமா, சிறுவயதிலேயே சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் குழந்தையாக பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஒரு நீச்சல் குளம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடங்கிய அவரது முயற்சி, இன்று பள்ளிகளில் கட்டாய நீச்சல் பயிற்சி வேண்டும் என்ற மாநில அளவிலான விவாதமாக மாறியுள்ளது.
தற்போதைய முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சரை சந்தித்து, மீண்டும் தனது கோரிக்கை தொடர்பாக பேச முயற்சித்து வருகிறார்.
குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றும் ஒரு கொள்கை மாற்றத்திற்கான விவாதத்தை, எட்டு வயது சிறுமி ஒருவரின் விடாமுயற்சி மீண்டும் முன்னிலைப்படுத்தி உள்ளது.



0 கருத்துகள்: