பிரியாவிடை பெற்றார் 'பாசத்திற்குரிய பாரதிராஜா' - முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் !!!
காவல் துறையினரின் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இயக்குநர் பாரதிராஜாவின் உடல் அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இயக்குநர் இமயம் என்றழைக்கப்படும் பாரதிராஜா (வயது 84) நேற்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். இசையமைப்பாளர் இளையராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகை ராதிகா, நடிகர்கள் சூர்யா, கார்த்திக், சிவக்குமார், விஜய் சேதுபதி உள்ளிட்ட தமிழ் திரையுலக பிரமுகர்கள் கண்ணீர் மல்க பாரதிராஜாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தேனி மாவட்ட மக்கள் மட்டுமின்றி திரை உலகினரும் பெருந்திரளாக பங்கேற்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் சி.டி.ஆர்.நிர்மல்குமார், வன்னி அரசு ஆகியோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்கில் திரைப்பட இயக்குநர்கள் பாக்யராஜ், அமீர், பார்த்திபன், நடிகர் வடிவேலு, நடிகைகள், சின்னத்திரை நடிகர், நடிகைகள், கவிஞர் வைரமுத்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஊர் பொதுமக்கள் என 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தார் பாரதிராஜாவின் உடலுக்கு இறுதி சடங்குகளை செய்தபின் நல்லடக்கம் செய்யும் இடத்திற்கு அவரின் உடல் எடுத்து வரப்பட்டது. அங்கு தமிழக அரசு சார்பில் 24 காவலர்கள் தலா மூன்று குண்டுகள் வீதம் 72 குண்டுகள் வானை நோக்கி சுட்டு அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகை ராதிகா உள்ளிட்டோர் காலை முதல் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யும் வரை அவரது இறுதிப் பயணத்தில் கலந்து கொண்டனர்.
முன்னதாக, தேனி மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள் பாரதிராஜாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

0 கருத்துகள்: