வெள்ளி, 19 ஜூன், 2026

கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வாய்ப்பு உள்ளதா ? இலங்கை எம்.பி ரவூப் ஹக்கீம் விளக்கம் !!!

SHARE

 கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வாய்ப்பு உள்ளதா ? இலங்கை எம்.பி ரவூப் ஹக்கீம் விளக்கம் !!!

கச்சத்தீவை இந்தியாவிடம் இலங்கை ஒப்படைக்க வாய்ப்பு உள்ளதா ? என்கிற கேள்விக்கு அந்நாட்டைச் சேர்ந்த எம்பி ரவூப் ஹக்கிம் விளக்கம் அளித்து உள்ளார்.

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல் ரவூப் ஹக்கீம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகானை சென்னை தஸைமைச் செயலகத்தில் இன்று நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பிற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,

 "அமைச்சர் ஏ.எம். ஷாஜகானை சந்திக்கும் பொருட்டு தலைமை செயலகம் வந்து உள்ளேன். அடுத்ததாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை சந்திக்க இலங்கையில் உள்ள தமிழ் எம்.பி-க்கள் குழுவாக வர திட்டமிட்டு உள்ளோம்.

இன்றைய சந்திப்பில் மீனவர் பிரச்சனையை தீர்க்கும் பொருட்டு பல்வேறு விதமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், குறிப்பாக தமிழக மீனவர்களையும், இலங்கை மீனவர்களையும் கூட்டாக செயல்பட வைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

மீனவர்கள் பிரச்சனை தொடர்ந்துக் கொண்டு இருக்கிறது. இது கவலைக்குரிய விஷயமாகும். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு இரண்டு நாடு அரசுகளுக்கு இடையேயும், மீனவ சமூகங்களுக்கு இடையேயும் தீவிரமான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்துவதால் தான் பிரச்சனை எழுகிறது. அது போன்ற வலைகளை மீனவர்கள் பயன்படுத்தாமல் இருக்க மாற்று ஏற்பாடுகளை அரசு முன்னெடுக்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து அவரிடம் கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வாய்ப்பு உள்ளதா ? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், 

"கச்சத்தீவை மீண்டும் ஒப்படைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தால், அதற்கு ஐக்கிய நாடுகள் (ஐநா) சபைக்கு தான் செல்ல வேண்டும். இனிமேல் இந்தியா - இலங்கை இடையே பேச்சுவார்த்தை நடத்தி அதனைத் திரும்ப பெற முடியாது. இல்லாவிட்டால் படையடுப்பு நடத்தி தான் நிலத்தை எடுக்க முடியும்" என கூறினார்.

இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த 285 ஏக்கர் பரப்பளவு கொண்ட கச்சத்தீவு, 1974 ஆம் ஆண்டில் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கையுடனான நட்புறவை மேம்படுத்தும் விதமாக வழங்கினார். இரு நாடுகளுக்கு இடையேயான எல்லையை தீர்மானிக்கும் பொருட்டு இந்த தாரைவார்ப்பு மேற்கொள்ளப்பட்டது. மேலும், கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டு இருந்தாலும், அங்கு இந்திய மீனவர்கள் ஓய்வெடுக்க, வலைகளை உலர்த்த மற்றும் அங்கு உள்ள அந்தோணியார் கோயிலுக்கு சென்று வரவும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: