த்ரிஷா படம் எங்கே ? காரைக்குடி மாநகராட்சி கூட்டத்தில் கொந்தளித்த சுயேச்சை கவுன்சிலர்; அதிர்ந்த மாமன்றம் !!!
காரைக்குடி மாநகராட்சிக் கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர் ஒருவர் நடிகை த்ரிஷாவின் படத்தை வைக்கக் கோரிய சம்பவத்தால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்குடி மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் இன்று பொறுப்பு மேயர் குணசேகரன் தலைமையில், ஆணையாளர் பாலு முன்னிலையில் தொடங்கியது. கூட்டம் தொடங்கிய உடனே மாநகராட்சியில் எந்தவொரு வார்டிலும் பணிகள் சரியாக நடைபெறவில்லை என்று கூறி தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் கவுன்சிலர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கூச்சலிட்டனர்.
அப்போது மாமன்ற கூட்ட அரங்கில் தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் படம் மட்டுமே வைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்ட அ.தி.மு.க கவுன்சிலர்கள் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் படத்தையும், தி.மு.க கவுன்சிலர்கள் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் படத்தையும் வைக்க வேண்டும் என மாறி மாறி கோஷமிட்டனர்.
இதை அடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, வேறு வழியின்றி கூட்ட அரங்கில் முதலில் எடப்பாடி பழனிசாமியின் படமும், அதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் படங்களும் வரிசையாக வைக்கப்பட்டன.
இதற்கு இடையே, தங்களது வார்டு கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டி, அ.தி.மு.க வைச் சேர்ந்த 27-வது வார்டு கவுன்சிலர் பிரகாஷ், பொறுப்பு மேயரின் இருக்கை முன்பாக அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அவையில் பரபரப்பு கூடியது.
இந்த பரபரப்பான சூழலுக்கு நடுவே, அவையில் பங்கேற்ற சுயேச்சை மாமன்ற உறுப்பினர் மெய்யர் என்பவர் திடீரென எழுந்து, 'மாமன்ற கூட்ட அரங்கில் வருங்கால முதலமைச்சர் த்ரிஷாவின் படத்தை வைக்க வேண்டும்' என விநோத கோரிக்கையை முன் வைத்தார்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்த நடிகை த்ரிஷாவின் புகைப்படத்தை வைக்காமல் இருப்பது ஏன்? என்றும் அங்கு இருந்த அதிகாரிகளிடம் அவர் கேள்வி எழுப்பினார். அடுத்த முதல்வராக இருக்கும் அவரின் புகைப்படத்தை வைக்காமல் மற்ற தலைவர்களின் புகைப்படத்தை வைப்பதை ஏற்க முடியாது என்றும், த்ரிஷாவின் போட்டோ கண்டிப்பாக மாநகராட்சி கூட்ட அரங்கில் வைக்கப்பட வேண்டும் எனவும் தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார் இந்த மூத்த சுயேச்சை கவுன்சிலர்.
தலைவர்கள் பட விவகாரத்தில் ஏற்கனவே சூடாக இருந்த அவையில், கவுன்சிலர் மெய்யரின் இந்த பிடிவாதமான கோரிக்கை அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பையும், அதேசமயம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

0 கருத்துகள்: