புதன், 15 ஜூலை, 2026

மதுரையில் கோர விபத்து: ஆம்னி - அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதல்; 6 பேர் உயிரிழப்பு !!!

SHARE

 மதுரையில் கோர விபத்து: ஆம்னி - அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதல்; 6 பேர் உயிரிழப்பு !!!

கொட்டாம்பட்டி அருகே தனியார் ஆம்னி பேருந்து, தமிழ்நாடு அரசு பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படுத்தியதில், சம்பவ இடத்திலேயே பெண் உள்பட 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே வஞ்சிநகரம் நான்கு வழிச்சாலையில், இன்று திங்கட்கிழமை (ஜூலை 13) அதிகாலை சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி கே.எம்.ஆர் டிரான்ஸ் (KMR Tranz) எனும் தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டு இருந்தது. கீழ் மற்றும் மேல்தள படுக்கை வசதி கொண்ட இந்த பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பை மீறி, எதிர் திசையில் சாலையில் நுழைந்து உள்ளது.

அப்போது, திருச்சிராப்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது, தனியார் ஆம்னி பேருந்து வேகமாக மோதி, பயங்கர விபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில், 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என 5 பேர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்ததாக நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் உறுதி செய்தனர்.

அரசு பேருந்து மீது மோதிய வேகத்தில், தனியார் ஆம்னி பேருந்து மீண்டும் இடது புறம் வஞ்சிநகரம் கிராமத்தில் அமைக்கப்பட்டு இருந்த பேருந்து நிறுத்த பயணிகள் நிழற்குடையில் பயங்கரமாக மோதி உள்ளது.

அதில், அங்கு உறங்கிக்கொண்டிருந்த ஒருவர் மீதும் பேருந்து மோதியதால், அவரும் உயிரிழந்ததாக காவல்துறை உறுதி செய்துள்ளது. இந்த விபத்தில் காயம் அடைந்த 41 பேர் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பயணிகள் சிலர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால், அவர்கள் மட்டும் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக மாநகர காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) அபினவ் குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், விபத்தில் அரசுப் பேருந்து பயணம் செய்தவர்கள் 3 பேரும், ஆம்னி பேருந்தில் சென்றவர்கள் 2 பேரும், பேருந்து நிறுத்தத்தில் உறங்கியவர் ஒருவர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்து இருப்பதாக கொண்டாம்பட்டி காவல்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.

அவர்கள், திருநெல்வேலி மாவட்டம், சமாதானபுரத்தைச் சேர்ந்த சிரியபுஷ்பம் (56), திசையன்விளை பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் (40), இடையமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (46), திருச்சிராப் பள்ளியைச் சேர்ந்த சூர்யா (29), திருவாரூர் கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த முகமது யாசின் (60), ஆகியோர் விபத்து நடந்த இடத்திலும், மதுரை, வஞ்சி நகரத்தைச் சேர்ந்த பெருமாள் (71) என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றியும் உயிரிழந்தனர் என்று கண்டறியப்பட்டு உள்ளது.

விபத்து தொடர்பாக தகவல் கிடைத்தவுடன், மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்நிலையில், உயிரிழந்தவர்கள் 6 பேரின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்து இருக்கும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.

மேலும், இவ்விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 7 நபர்களுக்கும், லேசான காயம் அடைந்து சிகிச்சைப் பெற்று வரும் 15 நபர்களுக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு உள்ளேன் எனவும் தனது அறிவிப்பில் முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டு உள்ளார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: