ஏண்டா உனக்கு இதே வேலையா போச்சு ? பைப்பை ஏண்டா போட்ட!" - ஓடையில் தண்ணீரைத் திருடிய நபரைக் கிழித்தெறிந்த விவசாயி - அதிர்ச்சி வீடியோ !!!
பாலத்துறை தடுப்பணையில் ரகசிய மோட்டார் மூலம் பகிரங்கத் திருட்டு: ஆவேசத்தில் விவசாயிகள் – மாவட்ட நிர்வாகத்திற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் !!!
கோவை, மதுக்கரை அருகே உள்ள சீராபாளையம் கிராமத்தின் பாலத்துறை பகுதியில், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக ஓடைத் தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டு இருந்த தண்ணீரை, திருட்டுத்தனமாகப் பைப் போட்டு மோட்டார் மூலம் எடுத்த நபரை உள்ளூர் விவசாயி ஒருவர் நேருக்கு, நேராக மடக்கிப் பிடித்து, "ஏண்டா உனக்கு இதே வேலையா போச்சு? பைப்பை ஏண்டா போட்ட!" என ஆவேசத்தின் உச்சத்தில் ஓங்கிச் சத்தம் போட்ட வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி, விவசாயிகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்மேற்கு பருவமழை நிலவரம் ஒருபுறமிருக்க, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் விவசாயத் தேவைகளுக்காகவும் மிகுந்த சிரமத்திற்கு இடையே சேமித்து வைக்கப்படும் பொதுச் சொத்தான தண்ணீரை, தனி நபர் ஒருவர் தடுப்புச் சுவரின் மீதே பிரம்மாண்ட பைப்பைப் போட்டுத் திருடி வந்த அராஜகம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.
தோட்டத்திற்கு வந்த உள்ளூர் விவசாயி ஒருவர், தடுப்பணையில் தண்ணீர் சட்டவிரோதமாக உறிஞ்சப்படுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அந்த நபரைக் கையும், களவுமாகப் பிடித்துத் தன் செல்போனில் வீடியோ பதிவு செய்தபடியே வெளுத்து வாங்கி உள்ளார்.
ஜாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயச் சங்கம் இந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு, “பொது நீர்நிலைகளில் திருட்டுத்தனமாக மோட்டார் வைத்துத் தண்ணீரைக் கடத்தும் நபர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அந்த மோட்டார் மற்றும் பைப் உபகரணங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்” என மாவட்ட நிர்வாகத்திற்கும் மதுக்கரை வட்டாட்சியருக்கும் அவசரக் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த வீடியோவால், மதுக்கரை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் பெரும் விவாதமும் வெடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: