வியாழன், 9 ஜூலை, 2026

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு !!!

SHARE

 ஓணம் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு !!!

ஓணம் திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் முதல் மதுரை வழியாக கேரளம் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு செல்லும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

ஓணம் பண்டிகை, கேரளம் மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையாகும். அதன்படி, இந்த வருடம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 29 வரை ஓணம் திருவிழா கேரள மாநிலத்தில் கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு, தெற்கு ரயில்வே மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்கள் வழியாக திருவனந்தபுரம் வரை சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது.

அதன்படி, ஓணம் திருவிழாவை முன்னிட்டு சொந்த ஊருக்குத் திரும்பும் பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டும், கூட்ட நெரிசலை சமாளிப்பதற்கும், திருவனந்தபுரம் சென்ட்ரல் - தாம்பரம் விரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06110) அறிவிக்கப்பட்டு உள்ளது. திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து ஆகஸ்ட் 12, 19, 26 மற்றும் செப்டம்பர் 2 ஆம் தேதிகளில் ஒவ்வொரு புதன்கிழமை அன்றும், பிற்பகல் 3.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் வியாழக் கிழமைகளில் காலை 10 மணி அளவில் தாம்பரம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், தாம்பரம் - திருவனந்தபுரம் சென்ட்ரல் விரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06109) தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து, ஆகஸ்ட் 13, 20, 27 மற்றும் செப்டம்பர் 3ஆம் தேதிகளில் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் பிற்பகல் 2 மணி அளவில் புறப்பட்டு, மறுநாள் வெள்ளிக்கிழமைகளில் காலை 7.15 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரலை சென்றடையும்.

இந்த ரயில்களில் இரண்டடுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் 2, மூன்றடுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் 8, படுக்கை வசதி கொண்ட 2ஆம் வகுப்புப் பெட்டிகள் 6, பொதுப்பெட்டிகள் மற்றும் சரக்குப் பெட்டிகள் 6 என மொத்தம் 24 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

இரு மார்க்கங்களிலும் மேற்கண்ட ரயில்கள் வர்கலா, கொல்லம், கொட்டாரக்கரா, அவுனேஸ்வரம், புனலூர், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேற்கண்ட ரயில்களுக்கான முன்பதிவுகள் இன்று (ஜூலை 9) காலை 8 மணி அளவில் தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: