மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலத்தை கையகப்படுத்துவதா ? போர்க்கொடி தூக்கிய கிராம மக்கள் !!!
மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், அதிகாரிகளை திரும்பி செல்ல வலியுறுத்தி, மரத்தின் மண்ணெண்ணெய் கேன்களுடன் ஏறி மக்கள் தற்கொலை மிரட்டலும் விடுத்ததால் பதற்றம் உருவானது.
மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக கடந்த 2009-ம் ஆண்டு திட்ட வரைவு உருவாக்கப்பட்டது. அதன்படி, தற்போதைய 7,500 அடி நீளமுள்ள விமான ஓடுதளத்தை 12,500 அடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, சின்ன உடைப்பு கிராமத்தில் உள்ள 144 பேரின் வீடுகள், நிலங்களை கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்கான ஆணை, கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, 2022ஆம் ஆண்டு அதற்கான மதிப்பீடு தொகை நிர்ணயிக்கப்பட்டது.
அந்த தொகை அனைவருக்கும் வழங்கப்பட்டதாக தெரிகிறது. அதே சமயத்தில், மறு குடியமர்வு மற்றும் மறுவாழ்வு தொடர்பான எந்தவிதமான முறையான திட்டமும் உருவாக்கப்படவில்லை.
இதனை எதிர்த்து, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் சின்ன உடைப்பு கிராம மக்கள் அண்மையில் மனுத்தாக்கல் செய்து இருந்தனர். அதில், "மறு குடியமர்வு, மறுவாழ்வு வசதிகளை செய்யாமல் நிலம் கையகப்படுத்துதல் செல்லாது என உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர்கள் தங்கள் இடத்தில் இருந்து காலி செய்ய வேண்டும் என்றும், தவறினால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக, வரும் 20 ஆம் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்குவதற்காக, மதுரை தெற்கு தாசில்தார் வளர்மதி தலைமையில் அதிகாரிகள் சின்ன உடைப்பு கிராமத்திற்கு சென்றனர்.
இதனை அறிந்த கிராம மககள், அங்கு திரண்டு வந்து அதிகாரிகளை ஊருக்குள் விடாமல் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கிராமத்திற்கு உள்ள செல்லும் பாதைகளில் மரக்கட்டைகளை போட்டு அடைத்து வைத்தனர்.
மேலும், அதிகாரிகளை திரும்பிச் செல்ல வலியுறுத்தி, மண்ணெண்ணெய் கேன்களுடன் மரத்தின் மீது ஏறி தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வருவதாக கூறி அங்கு இருந்து திரும்பிச் சென்றனர்.

0 கருத்துகள்: