தம்பியை தாக்கிய வழக்கில் அமைச்சர் மரிய வில்சனுக்கு கெடு; இன்று நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு !!!
உடன்பிறந்த தம்பியை தாக்கிய வழக்கில் இன்று கண்டிப்பாக நேரில் ஆஜராக தமிழக அமைச்சர் மரிய வில்சனுக்கு புதுவை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட மரிய வில்சன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.
இவரது உடன்பிறந்த தம்பியான மரிய கிளோத், புதுச்சேரி எழில் நகரில் வசித்து வருகிறார். மரிய வில்சனுக்கும், அவர் தம்பிக்கும் சொத்து மற்றும் தொழில் விவகாரத்தில் நீண்ட நாள்களாகப் பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது.
அதனால் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தந்தை நெஸ்தருடன் புதுச்சேரிக்கு வந்த மரியவில்சன், எழில் நகரில் உள்ள தன்னுடைய தம்பி வீட்டுக்குள் உருட்டுக்கட்டையுடன் நுழைந்து கணவன் மனைவி இருவரையும் கடுமையாக தாக்கி இருக்கிறார்.
இது குறித்த வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.
குறிப்பாக தி.மு.க ஆதரவாளர்கள் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து 'இவர்தான் நாட்டின் நிதியமைச்சர்' என ட்ரோல் செய்தனர். சிலரோ அது மரிய வில்சன் இல்லை என்றெல்லாம் கூறினார்கள்.
அமைச்சர் மரியவில்சனின் தம்பி மனைவி கேர்லின் கிளாட் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், கொலை முயற்சி உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் (IPC 448, 427, 324, 294 (b), 506 (i), 34) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
ஆனால் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத மரியவில்சன், அந்த விசாரணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், `வழக்கின் குற்றம் சாட்டப்பட்ட சம்பவத்தை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அதனால் அதை விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வருவது அவசியம்' என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.குமரப்பா. அதை அடுத்து அந்தத் தாக்குதல் சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகளை சேகரித்து, தேர்தலுக்குப் பிறகு விரிவான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர் லாஸ்பேட்டை போலீஸார்.
இந்நிலையில், குற்றப்பத்திரிகையை பெற்றுக்கொள்வதற்காக நாளை கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமைச்சர் மரியவில்சனுக்கு புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. த.வெ.க சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியின் வேட்பாளராக மரியவில்சன் அறிவிக்கப்பட்ட நேரத்தில், உருட்டுக்கட்டையுடன் அவர் தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் அதை முக்கியமான விமர்சனமாக வைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: