கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு நிபந்தனையின் கீழ் அரசு வேலை வழங்கலாம் - நீதிமன்றம் உத்தரவு !!!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு நிபந்தனையின் கீழ் அரசு வேலை வழங்கலாம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு இருக்கிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற தவெக பொது கூட்டத்தில் ஏற்பட்ட திடீர் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இவர்களுடைய குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. இன்று கரூரில் நடைபெறுகிற விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் விஜய், இந்த அரசு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.
இதன் இடையே, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கக் கூடாது என பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தீரன் திருமுருகன், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில நிர்வாகி சீனி அஹமது ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு இன்று காலை 10.45 மணி அளவில் விசாரணைக்கு வந்தன.
அப்போது, கரூரில் 41 பேர் பலியான சம்பவம் குறித்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதி அரசர் முன்பாக, சி.பி.ஐ விசாரணையில் உள்ளது. இந்த நேரத்தில் இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கக் கூடாது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
அதில் தற்போதைய அரசு, கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு கருணை அடிப்படையில் அரசு பணிகளை வழங்க திட்டமிட்டு உள்ளது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே தொடரப்பட்ட இதுபோன்ற வழக்குகளான கும்பகோணம் மகாமகம் சம்பவம், ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு, தருமபுரி பஸ் எரிப்பு சம்பவம் ஆகிய நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவில்லை. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு கருணைப் பணி வழங்குவது விதிகளுக்கு எதிரானது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதிகள், அரசுப் பணி வழங்குவது குறித்து சட்டசபையில் அறிவித்தீர்களா? என அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு அரசுப்பணி வழங்கப்பட்டு உள்ளது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அரசின் கொள்கை தொடர்பான முடிவில் தலையிட விரும்பவில்லை. இன்று அரசு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறலாம். ஆனால் தற்காலிகமாகவே பணி வழங்கப்பட வேண்டும் (இந்த விவகாரத்தில் நீதிமன்றம் இறுதி முடிவெடுக்கும் வரை) என்று கூறி வழக்கின் விசாரணையை வரும் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
மேலும், நீதிமன்றம் தானாக முன்வந்து TNPS-ஐ வழக்கில் சேர்த்து உத்தரவிட்டு உள்ளது.

0 கருத்துகள்: