நின்று கொண்டு இருந்த தனியார் பேருந்தின் பின்னால் மோதிய சரக்கு வாகனம்; மூன்று பேர் காயம் !!!
நின்று கொண்டு இருந்த தனியார் பேருந்தின் பின்னால் சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தவர் திருமலைராசன். இவர் சரக்கு வாகனத்தில் முருங்கைக்காய் லோடு ஏற்றிக்கொண்டு தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்ட இருந்தார். அதே சாலையில் சென்றுக் கொண்டு இருந்த தனியார் பேருந்து ஒன்று காந்தி காய்கறி மார்கெட் முன்பு பயணிகளை இறக்குவதற்காக வந்த வேகத்தில் நிறுத்தப்பட்டது.
இதனைக் கவனிக்காததால் திருமலைராசன் ஓட்டி வந்த சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக பேருந்தின் பின்னால் மோதி விபத்துக்கு உள்ளானது. பேருந்தின் பக்கவாட்டு பகுதியில் மோதி விபத்துக்கு உள்ளானதால் சரக்கு வாகனம் நடுரோட்டில் தலை கீழாக கவிழ்ந்தது.
மேலும், பேருந்தின் பின்னால் இருந்த கண்ணாடி உடைந்து சிதறியதில் அதில் இருந்த பயணிகள் இருவருக்கு காயம் ஏற்பட்டது. இதேபோல், சரக்கு வாகனம் ஓட்டி வந்த திருமலைராசனுக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. இவர்களை மீட்ட பொதுமக்கள் மற்றும் போலீசார் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் இடையே தனியார் பேருந்தின் பின்னால் மோதும் சரக்கு வாகனம் குறித்த சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: