வால்பாறை மலைச் சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து : 12 பேர் காயங்களுடன் தப்பினர்!
1-வது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்த வேன் : பாம்பன் சுற்றுலா பயணிகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி!
வால்பாறை மலைச் சாலையில், ராமநாதபுரம் மாவட்டம் பம்பன் பகுதியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் பயணித்த மேக்ஸி கேப் வேன் பிரேக் பிடிக்காமல் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியில் இருந்து 19 பேர் கொண்ட குழுவினர் 4 நாள் பயணமாக வால்பாறைக்குச் சுற்றுலா வந்து இருந்தனர். சுற்றுலா முடிந்து மீண்டும் பொள்ளாச்சி வழியாகச் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டு இருந்த போது, மாலை 5.45 மணி அளவில் கடம்பாறை காவல் எல்லைக்கு உட்பட்ட 1-வது கொண்டை ஊசி வளைவில் (SH-78) வேன் வந்து கொண்டு இருந்தது.
அப்போது, வாகனத்தை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஷேக் அகமது (28) என்பவரது கட்டுப்பாட்டை இழந்து, பிரேக் பிடிக்காததால் வேன் சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆழியார் மற்றும் கடம்பாறை போலீஸார், வனத்துறையினருடன் இணைந்து காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் அனைவரும் சிகிச்சைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 12 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது:
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன், பகுதியைச் சேர்ந்த சாமினி (36), கெம்சிலின் (29), எகித் ராணி (58), சூசை வியாகுலம் (62), சந்தியா மேரி (70), ஜான் மேக்லோவின் (45),
கெவின் (51), 9 வயது குழந்தைகள் இரண்டு, 13, 14 வயது குழந்தை ஆகிய நான்கு குழந்தைகள் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த அசோக் குமார்,
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. விபத்து காரணமாக மலைச் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வால்பாறை உட்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர் (DSP) மற்றும் காவல் அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இச்சம்பவம் குறித்துக் கடம்பாறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்: