கோவை, சூலூரில் வீட்டின் சுவர் ஏறி குதித்துத் தப்பிய வடமாநிலப் பெண்...
செல்போன் வீடியோ இணையத்தில் தீயாக வைரல்: கைதான அதே 5 பேர் கொண்ட திருட்டுக் கும்பலா ?
கோவை, சிங்காநல்லூர் போலீஸார் சிறையில் அடைத்த கும்பலின் வீடியோவா ? சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள் வைரல்!
கோவை மாநகரில் வீடுகளுக்குள் புகுந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 5 பெண்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிலையில், சூலூர் பகுதியில் வடமாநிலப் பெண் ஒருவர் வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது ஏறிக் குதித்துத் தப்பிச் செல்லும் வீடியோ இணையத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, சிங்காநல்லூர் ஜி.வி. ரெசிடென்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாசகம் கேட்பது போல வீடுகளை நோட்டமிட்டு, பல லட்சம் ரூபாய் மதிப்பு உள்ள செப்புக் கம்பிகள், ஏசி சாதனங்கள் மற்றும் பொருட்களைத் திருடி வந்த 5 வடமாநிலப் பெண்கள் கொண்ட கும்பலை அண்மையில் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். அதனைத் தொடர்ந்து சிங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்த 5 பெண்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கோவை சூலூர் பகுதியில் வடமாநிலப் பெண் ஒருவர் பட்டப் பகலிலேயே ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது மின்னல் வேகத்தில் ஏறிக் குதித்துத் தப்பியோடும் அதிர்ச்சி அளிக்கும் செல்போன் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், தடுப்புச் சுவரில் சுலபமாக ஏறி அந்த வடமாநிலப் பெண், சுவருக்கு வெளி பக்கம் குதித்துத் தப்பிக்கிறார். அதே வேளையில், அவரது கூட்டாளிகள் சிலர் தெருவில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடும் காட்சிகளும் பதிவாகி உள்ளன.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியதை அடுத்து, "சிங்காநல்லூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட அதே 5 பெண்கள் கொண்ட கும்பல் தானா இது ? அல்லது கைதாவதற்கு முன்பு இவர்கள் சூலூர் பகுதியில் கைவரிசை காட்டிய போது பதிவான காட்சியா ?" என்ற சந்தேகம் பொதுமக்கள் இடையே எழுந்து உள்ளது.
மேலும், இது கைதான கும்பலின் பழைய வீடியோவா அல்லது அதே பாணியில் நகருக்குள் உலாவரும் புதிய திருட்டுக் கும்பலா ? என்பது குறித்துச் சூலூர் மற்றும் சிங்காநல்லூர் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றும் வடமாநில நபர்களை தீவிரமாகக் கண்காணிக்கவும், பகல் மற்றும் இரவு நேரப் போலீஸ் ரோந்துப் பணியை அதிகரிக்கவும் குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

0 கருத்துகள்: