கோவையில் தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்!
கோவை அருகே பாப்பம்பட்டி பகுதியில் பெண் ஒருவரிடம் மது மற்றும் கஞ்சா போதையில் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற வாலிபர்களை, பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்துத் தர்ம அடி கொடுத்துக் காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் அடுத்த பாப்பம்பட்டி பகுதியில், பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த போது, அவரை வழிமறித்த இரு வாலிபர்கள் திடீரென அவர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்று உள்ளனர். இதனால் திடுக்கிட்ட அந்தப் பெண் சத்தம்போட்டுக் கூச்சலிட்டு உள்ளார்.
அப்ப பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் பகுதிவாசிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஓடிவந்தனர்.
பொதுமக்களைக் கண்டதும் தப்பித்து ஓட முயன்ற அந்த நபர்களைச் சுற்றிய வளைத்துப் பிடித்தனர்.
பிடிபட்ட வாலிபர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் மது அருந்தி விட்டு, கஞ்சா போதையிலும் மிதந்தது தெரியவந்தது.
போதையின் உச்சத்தில் அவர்கள் பெண் தனியாகச் செல்வதைப் பயன்படுத்தித் தங்கச் சங்கிலியைப் பறிக்கத் திட்டமிட்டது அம்பலமானது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், குற்றச் செயலில் ஈடுபட முயன்ற அந்த வாலிபர்களுக்குச் சம்பவ இடத்திலேயே வைத்துத் 'தர்ம அடி' கொடுத்தனர். பின்னர், இது குறித்துச் சூலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூலூர் போலீசார், காயம் அடைந்த வாலிபர்களைப் மீட்டு விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் யார் ?, எந்த ? ஊரைச் சேர்ந்தவர்கள், அவர்கள் மீது வேறு ஏதேனும் ?வழக்குகள் நிலுவையில் உள்ளதா ? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, கஞ்சா போதையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபர்களைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்துத் தர்ம அடி கொடுக்கும் செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
போதைப்பொருட்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்திக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

0 கருத்துகள்: