செவ்வாய், 1 செப்டம்பர், 2026

"முகவரி கேட்பது போல் நடித்து கைவரிசை" ; கோவையில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது!

SHARE

ஆடம்பர வாழ்க்கை மற்றும் கடனை அடைக்கக் குறுக்கு வழி: TVS ஜூபிட்டர் பைக், 4 பவுன் நகை பறிமுதல்!

 கோவையில் முகமூடி அணிந்து கொண்டு தொடர் நகைப் பறிப்பில் ஈடுபட்டு வந்த இரு தனியார் கல்லூரி மாணவர்களைப் போத்தனூர் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர்.

கோவை, போத்தனூர் காவல் எல்லைக்கு உட்பட்ட வெள்ளலூர் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி மாலை, சரஸ்வதி என்பவர் தனது உறவினருடன் பேருந்து நிறுத்தம் அருகே பேசிக் கொண்டு இருந்தார்.

​அப்போது,TV S ஜூபிட்டர் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த நபர் ஒருவர், சரஸ்வதியிடம் "முகவரி" கேட்பது போல் நடித்துக் கவனத்தைத் திசை திருப்பி, கண் இமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினார்.

​அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி கூச்சலிடவே, அங்கே தயாராக நின்று இருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி அந்த நபர் மின்னல் வேகத்தில் தப்பியோடினார்.

இச்சம்பவம் குறித்துச் சரஸ்வதி அளித்த புகாரின் பேரில், கோவை மாநகரக் காவல் ஆணையரின் உத்தரவின்படி, போத்தனூர் காவல் ஆய்வாளர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

​சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளைத் தனிப்படை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் குற்றச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட TVS Jupiter இருசக்கர வாகனத்தின் பதிவு எண் (TN 99 AD 4548) துல்லியமாகக் கண்டறியப்பட்டது.

சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் தொடர் விசாரணை நடத்திய போலீசார், சிவகுமார் என்பவரது மகனும் தனியார் கல்லூரி மாணவருமான பரணிதரன் (21) என்பவனைக் கைது செய்தனர். அவனிடம் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

​பரணிதரனும் அவனது கல்லூரித் தோழரான சிந்து என்பவனும் சேர்ந்து, தங்களது ஆடம்பர செலவுகளுக்காகவும், பரணிதரனுக்கு இருந்த கடனை அடைப்பதற்காகவும் வயதான பெண்களை இலக்கு வைத்து (Target) இந்த நகைப் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

​இதை அடுத்து, விடுதியில் தங்கியிருந்த மற்றொரு மாணவனான சிந்துவையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.

இருவரிடம் இருந்தும் சுமார் 4 பவுன் தங்கச் சங்கிலி, 2 செல்போன்கள் மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்திய TVS ஜூபிட்டர் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக மாநகரக் காவல் துணை ஆணையாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

 எதிர்காலத்தைத் திட்டமிட வேண்டிய கல்லூரி மாணவர்களே குறுக்கு வழியில் ஆடம்பரமாக வாழ வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்டு கைதாகி உள்ள சம்பவம் கோவை மக்கள் இடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: