காப்பித் தோட்டத்தில் தஞ்சம் புகுந்த தாய்-குட்டி யானைகள்: வனத்துறையினர் எச்சரிக்கையுடன் இருக்க விவசாயிகள் அறிவுரை!
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு, பாமரபாறைப் பகுதியில் குட்டியுடன் ஒற்றைக் காட்டு யானை காப்பித் தோட்டத்தில் முகாமிட்டு உள்ளதால், அப்பகுதிப் பொதுமக்கள் மற்றும் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் கவனத்துடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சுற்றுவட்டார மலைப் பகுதிகளில் காப்பி, ஆரஞ்சு, சௌசௌ மற்றும் பீன்ஸ் போன்ற பயிர்கள் அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன.
பாறைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த காலங்களில் யானைகளின் நடமாட்டம் அரிதாகவே இருந்தது.
ஆனால், சமீபகாலமாக வனப் பகுதியில் இருந்து உணவையும், தண்ணீரையும் தேடி யானைகள் பண்ணைக்காடு மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளுக்குள் ஊடுருவுவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இன்று பண்ணைக்காடு அருகே உள்ள 'பாமரபாறை' பகுதியில் உள்ள விவசாயக் காடுகளுக்குள் குட்டியுடன் ஒற்றைக் காட்டு யானை சுற்றித் திரிவதைப் பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், உள்ளூர் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், அந்த யானை குட்டியுடன் சிறிது தூரம் மட்டுமே நகர்ந்து, அப்பகுதியில் உள்ள புகழ்பெற்ற சுடலை காளியம்மன் கோவில் அருகே அமைந்து இருக்கும் காப்பித் தோட்டத்திற்குள் சென்று தஞ்சம் அடைந்தது.
யானை குட்டியுடன் காப்பித் தோட்டத்தில் முகாமிட்டு இருப்பதை அங்கு இருந்த சில இளைஞர்கள் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவிட்டு, "சுடலை காளியம்மன் கோவில் பகுதிக்கு யாரும் தனியாகச் செல்ல வேண்டாம்" என ஊர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாலை நேரம் ஆகிவிட்டதால் வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியைத் தற்காலிகமாகக் கைவிட்டு அங்கு இருந்து சென்று விட்டனர். இதன் காரணமாக, அப்பகுதி வழியாகச் செல்லும் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சுடலை காளியம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

0 கருத்துகள்: