திங்கள், 7 செப்டம்பர், 2026

"காலில் இரும்புக் கம்பியுடன் தவித்த பெண் யானை" - ட்ரோன் மூலம் கண்காணித்து வனத்துறை அதிரடி சிகிச்சை!

SHARE

சிறுமுகை காப்பக்காடு பகுதியில் கும்கிகள், 5 மருத்துவர்கள் உதவியுடன் மீட்பு : மயக்க ஊசி செலுத்திப் புதுவாழ்வு!

கோவை மாவட்டம், சிறுமுகை வனப்பகுதியில் காலில் ஆழமாக இரும்புக் கம்பி சிக்கி வலியால் தவித்துக் கொண்டு இருந்த பெண் யானையை, வனத்துறையினர் மற்றும் சிறப்பு மருத்துவக் குழுவினர் ட்ரோன் மூலம் கண்காணித்து வெற்றிகரமாக மயக்க ஊசி செலுத்திச் சிகிச்சை அளித்துக் காப்பாற்றி உள்ளனர். 

கோவை, வனக்கோட்டத்திற்கு உட்பட்ட சிறுமுகை வனச்சரகத்தைச் சேர்ந்த பெத்திக்குட்டை, உளியூர் காப்பக்காடு பகுதியில் கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி வனப் பணியாளர்கள் வழக்கம் போல் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அங்கு சுற்றித் திரிந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்கப் பெண் யானை ஒன்று நடப்பதற்குச் சிரமப்பட்டு மெதுவாக நடந்து செல்வதைக் கவனித்தனர். உன்னிப்பாகப் பார்த்த போது, அந்த யானையின் இடது முன்னங்காலில் தடிமனான இரும்புக் கம்பி ஒன்று ஆழமாகச் சிக்கி, அது காயத்தை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்தது. இது குறித்து வனப்பணியாளர்கள் உடனடியாகக் கோவை மாவட்ட வன அலுவலருக்கு (DFO) விரிவான தகவல் அளித்தனர்.

காயம் அடைந்த யானைக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க வனத்துறை உயர் அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெறப்பட்டது. கோவை மாவட்ட வன அலுவலர் தலைமையில், சிறுமுகை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர்கள், 60-க்கும் மேற்பட்ட வனப் பணியாளர்கள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் கொண்ட சிறப்பு மீட்புக் குழு அமைக்கப்பட்டது.

யானைக்குப் பாதுகாப்பாகச் சிகிச்சை அளிப்பதற்காக ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்களைச் சேர்ந்த 5 கால்நடை மருத்துவக் குழுவினரும், யானைப் பாகன்களும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

அடர்ந்த வனப்பகுதிக்குள் காயம் அடைந்த யானை எங்குச் செல்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய நவீன ட்ரோன் (Drone) கேமராக்கள் வான்வழியாகப் பயன்படுத்தப்பட்டன. யானையின் நடமாட்டத்தைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்த குழுவினர், அதற்குச் சிகிச்சை அளிக்கச் சரியான வாய்ப்புக்காகக் காத்து இருந்தனர்.

சரியான சூழல் அமைந்ததும், நேற்று அடர்ந்த வனப்பகுதிக்கு உள்ளேயே வைத்து அனுபவம் வாய்ந்த கால்நடை மருத்துவர்கள் லாவகமாக யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.

மயக்க ஊசி செலுத்தப்பட்டு யானை நிலைகுலைந்து சாய்ந்ததும், சுற்றிலும் பாதுகாப்பை ஏற்படுத்திய மருத்துவக் குழுவினர், யானையின் இடது முன்னங்காலில் ஆழமாகப் பதிந்து இருந்த இரும்புக் கம்பியைச் கவனமாக வெளியே எடுத்தனர். பின்னர் காயம் அடைந்த பகுதிக்குக் கிருமிநாசினி மற்றும் தீவிர நிவாரண மருந்துகளை அளித்துச் சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சை முழுமையாக முடிந்த பிறகு, யானைக்கு மயக்கம் தெளிவிப்பதற்கான மாற்று மருந்து செலுத்தப்பட்டது. சில நிமிடங்களிலேயே மயக்கம் தெளிந்து இயல்பு நிலைக்குத் திரும்பிய அந்தப் பெண் யானை, ஆரோக்கியத்துடன் மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் நடந்து சென்றது.

 வனத்துறையினரின் இந்தச் சமயோசிதமான மற்றும் துரிதமான மீட்பு நடவடிக்கை வன உயிரின ஆர்வலர்கள் இடையே பெரும் பாராட்டைப் பெற்று உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: