தந்தையின் இழிவானப் பேச்சால் ஆத்திரம் அடைந்த மகன் : கோவையில் மனைவியுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்த பயங்கரம் !!!
சந்தேக மரணம் கொலை வழக்காக மாற்றம் - தாய், மகன் அதிரடிக் கைது !!!
கோவை, சுண்டக்கமுத்தூர் பகுதியில், குடிப் பழக்கத்திற்கு அடிமையான கணவரை, அவரது மனைவியும் மகனும் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆரம்பத்தில் இயற்கை மரணம் என்று நம்பப்பட்ட இந்த விவகாரம், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின் கொலை வழக்காக மாற்றப்பட்டு, குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கோவை சுண்டக்கமுத்தூர், ரூபா நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (46). வாழை இலை வியாபாரம் செய்து வந்த இவருக்கு, அதிக அளவில் மது அருந்தும் பழக்கம் இருந்து உள்ளது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 13.04.2026 அன்று இரவு 9 மணி அளவில், போதையில் வீட்டிற்கு வந்த விஜயகுமார், பொருட்களைச் சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டு உள்ளார். சிறிது நேரம் கழித்து அவரது மனைவி பூங்குடி (43) பார்த்த போது, விஜயகுமார் சுயநினைவின்றி கிடந்து உள்ளார். உடனடியாக அவர் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முதலில் பேரூர் காவல்துறையினர் இதனைச் சந்தேக மரணம் (BNSS 194) எனப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால், பிரேதப் பரிசோதனையில் விஜயகுமாரின் கழுத்தில் அழுத்தக் காயங்கள் இருப்பதும், தொண்டை எலும்பு முறிந்து இருப்பதும் கண்டறியப்பட்டது. இது கொலைக்கான வலுவான ஆதாரமாக அமைந்ததை அடுத்து, பேரூர் காவல் ஆய்வாளர் தீவிர விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சம்பவத்தன்று இரவு, போதையில் இருந்த விஜயகுமார் தனது மனைவி பூங்குடியையும், மூத்த மகன் அருண்குமாரையும் (21) இணைத்து மிகவும் இழிவான முறையில் அவதூறாகப் பேசி உள்ளார். சொந்தத் தாய்க்கும் மகனுக்கும் இடையே கள்ள உறவு இருப்பதாக அவர் கூறியதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த அருண்குமார், தனது தந்தையைத் தள்ளிவிட்டு அவரது கழுத்தைப் பிடித்து உள்ளார். அதே நேரத்தில் ஆத்திரத்தில் இருந்த மனைவி பூங்குடியும் சேர்ந்து விஜயகுமாரைத் தாக்கி உள்ளார். இதில் கழுத்து நெரிக்கப்பட்ட விஜயகுமார் மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரியவந்தது.
உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, இந்த வழக்கு கொலை வழக்காக (BNS 103 & 238(b)) மாற்றப்பட்டது. குற்றவாளிகளான மனைவி பூங்குடி மற்றும் மகன் அருண்குமார் ஆகிய இருவரையும் பேரூர் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
குடும்பத் தகராறில் தந்தை கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: