தமிழருக்காக தமிழர் குரல் கொடுக்கவில்லை என்றால், வேறு யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள் - மே 17 திருமுருகன் காந்தி !!!
தமிழருக்காக தமிழர் குரல் கொடுக்கவில்லை என்றால், வேறு யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள் என 'மே 17 இயக்கம்' ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறி உள்ளார்.
சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில், இலங்கை முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களின் நினைவாக, மெழுகுவர்த்தி ஏற்றி, மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலையின் நினைவாக, ஆண்டுதோறும் இந்த நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில், தமிழ் ஆர்வலர்கள் பொதுமக்கள் மற்றும் மே 17 இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு தமிழீழ மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய 'மே 17 இயக்க' ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, "மே 17, 2009 இது மறக்கக் கூடாத நாள். இனப்படுகொலை தீவிரப்படுத்தப்பட்டு, மூன்று நாட்களில் மட்டும் சுமார் 70 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட நாள். 1948 தொடங்கி இன்று வரை இனப்படுகொலை தொடர்ந்து வருகிறது.
ஈழத்தில் தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. நாமும் இங்கு பல பிரச்சினைகளுடன் வாழ்கிறோம். ஆனால், நம்மை விட மோசமான சூழலில் ஈழ தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையை மாற்றவே அறவழியில் விடுதலைப் போராட்டம் நடத்தப்பட்டது.
அண்ணன் பிரபாகரன் தமிழர்களின் பல்வேறு பகுதிகளை மீட்டார். அவர் சிங்கள மக்களின் நிலங்களை கைப்பற்றவில்லை. சிங்கள மக்கள் மீது தாக்குதலும் நடத்தவில்லை. ‘எங்கள் பூர்வீக நிலத்தில், உங்கள் ஆட்சி வேண்டாம். நாங்களே எங்கள் பகுதிகளை ஆட்சி செய்து கொள்கிறோம்’ என்பதையே அவர் வலியுறுத்தினார். இதுவே விடுதலைப் புலிகள் போராட்டத்தின் அடிப்படை.
இதன் பின்னர் 2002 ஆம் ஆண்டில் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. தமிழர்கள் தங்கள் பகுதிகளை தாங்களே நிர்வகிக்கலாம் என அதன் மூலம் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை முறியடிக்க சிங்கள ராணுவம் மீண்டும் போரைத் தொடங்கியது.
அந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 1 லட்சத்து 67 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அவர்கள் நம்மை கூப்பிடும் தூரத்தில் இருந்தார்கள். ஆனால், அவர்களை நம்மால் காப்பாற்ற முடியவில்லை. இந்த இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும்.
எந்தவொரு சரியான விசாரணையும் இல்லாமல் 17 ஆண்டுகள் கடந்து விட்டன. இலங்கையில் தமிழர்கள் அந்த நாட்டோடு சேர்ந்து வாழ விரும்புகிறார்களா ? அல்லது அவர்கள் வாழும் நிலத்தை அவர்களே ஆட்சி செய்ய விரும்புகிறார்களா ? என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா., கூறியுள்ளது. இதற்காக தமிழ்நாடு சட்டசபையிலும் அனைத்து கட்சிகளும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. இது நமது போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி.
இங்கு நாம் ஒன்று கூடி மெழுகுவர்த்தி ஏந்தினால், ஒன்றரை லட்சம் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றால், அதைவிட நமக்கு வேறு என்ன பெருமை வேண்டும். மக்கள் ஒன்றிணைந்தால் தான் உலகம் நம்மை திரும்பிப் பார்க்கும். தமிழருக்காக தமிழர் குரல் கொடுக்கவில்லை என்றால், வேறு யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் ஜாதி ஒழியவில்லை. ஜாதி அடிப்படையிலான கொலைகளும் நிற்கவில்லை. தொடர்ந்து ஆணவப் படுகொலைகள் நடைபெற்று வருகின்றன" என தெரிவித்தார்.

0 கருத்துகள்: