கோவையில் ரூ.450 கோடியில் மேலும் 110 ஏக்கருக்கு விரிவடைகிறதா ? செம்மொழி பூங்கா ; தீம் பார்க், பிரம்மாண்ட பொருட்காட்சி திடல் என மாஸ்டர் பிளான் தயார் - அரசு அனுமதிக்காக காத்திருப்பு கோவை மாநகராட்சி வட்டாரங்கள் தகவல் !!!
கோவை மாநகரின் பிரதான அடையாளமாக விளங்கும் "செம்மொழி பூங்காவை" மேலும் 110 ஏக்கர் பரப்பளவிற்குப் பிரம்மாண்டமாக விஸ்தரிக்கும் நோக்கில், தனியார் ஆலோசனை நிறுவனம் மூலமாக "மாஸ்டர் பிளான்" (Master Plan) தயார் செய்து வைத்து உள்ளதாக கோவை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இந்த விரிவாக்கத் திட்டத்திற்கு உத்தேசமாக ரூ.450 கோடி நிதி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
கோவை காந்திபுரத்தின் இதயப் பகுதியில், மத்தியச் சிறைச்சாலைக்குச் சொந்தமான 45 ஏக்கர் நிலத்தில் முதற்கட்டமாகச் செம்மொழி பூங்கா மாநகராட்சியால் உருவாக்கப்பட்டுத் திறக்கப்பட்டது. உலகத் தரத்திலான கட்டமைப்புடன் அமைக்கப்பட்ட இந்தப் பூங்காவிற்குப் பொதுமக்கள் இடையேயும், சுற்றுலாப் பயணிகள் இடையேயும் மிக அமோகமான வரவேற்பு கிடைத்து உள்ளது.
இதனைத் தொடர்ந்து, கோவை மத்தியச் சிறைச்சாலையை காரமடை அருகே உள்ள "பிளிச்சி" பகுதிக்கு முழுமையாக இடமாற்றம் செய்த பின்னர், சிறைச் சாலைக்குச் சொந்தமான மீதமுள்ள இடத்திலும் பூங்கா விரிவாக்கம் செய்யப்படும் என முந்தைய தி.மு.க அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி, தற்போது சிறை வளாகத்தில் மீதமுள்ள 110 ஏக்கர் நிலத்தில் பூங்காவை விஸ்தரிப்பு செய்யும் போது, அங்கு பொதுமக்கள் மற்றும் குழந்தைகளைக் கவரும் வகையில் என்னென்ன உலகத் தரம் வாய்ந்த நவீன வசதிகளை ஏற்படுத்தலாம் என்பது குறித்த திட்ட அறிக்கை தயார் செய்து வைத்து உள்ளனர்.
சிறுவர், சிறுமிகளைப் பெருமளவில் ஈர்க்கும் வகையில் பல்வேறு நவீன விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பிரம்மாண்ட 'தீம் பார்க்' (Theme Park) உருவாக்கப்பட உள்ளது.
வர்த்தக ரீதியாகப் பெரிய தனியார் நிறுவனங்கள், அரசுத் துறையினர் மற்றும் சுய உதவிக் குழுக்கள் தங்களது பிரம்மாண்ட பொருட்காட்சிகளை (Trade Fairs & Exhibitions) நடத்துவதற்கேற்ப அதிநவீன உள்கட்டமைப்புடன் கூடிய பிரத்யேக இடவசதியும் இந்த 110 ஏக்கர் மாஸ்டர் பிளானில் திட்டமிடப்பட்டு உள்ளது.
தனியார் நிறுவனத்தின் மாஸ்டர் பிளான் அறிக்கை கையில் கிடைத்தவுடன், அது அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, நிதி ஒதுக்கீடு பெறப்பட்ட பின் பணிகள் தொடங்கும் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த 110 ஏக்கர் விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் பட்சத்தில், தென்னிந்தியாவிலேயே மிகச்சிறந்த மற்றும் பிரம்மாண்டமான நகர்ப்புற பொழுதுபோக்கு மையமாகச் செம்மொழி பூங்கா உருவெடுக்கும் என்பதால் கோவை மக்கள் மிகுந்த உற்சாகம் அடைந்து உள்ளனர்.

0 கருத்துகள்: