தூத்துக்குடியில் சிங்கப்பெண் 1091 உதவியால் காப்பாற்றப்பட்ட மாணவி - தந்தை போக்சோவில் கைது !!!
தனது தந்தை மது போதையில் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக சிங்கப்பெண் அவசர உதவி எண்ணுக்கு அழைத்து புகார் அளித்த சிறுமியை மகளிர் போலீசார் உடனடியாக மீட்டனர். மேலும் சிறுமியின் தந்தையை போக்சோவில் கைது செய்தனர்.
தூத்துக்குடியை சேர்ந்த காவலர், அங்கு உள்ள ஆயுதப்படையில் பேண்ட் வாத்திய கலைஞராக வேலை பார்த்து வந்து உள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இரண்டாவது மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
ஆயுதப்படை காவலர் அடிக்கடி மது போதையில் வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. மேலும் மது போதையில் தனது மூத்த மகளான 12 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லையும் கொடுத்து வந்து உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு மது போதையில் வந்த ஆயுதப்படை காவலர், தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதனை தடுக்க முயன்ற மூத்த மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதில் பாதிக்கப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவி உடனடியாக சிங்கப்பெண் உதவி எண்ணான 1091-க்கு அழைத்து, நடந்த சம்பவம் குறித்து கூறி உள்ளார். மாணவியின் புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் உடனடியாக ஆயுதப்படை காவலரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, புகார் அளித்த மாணவியையும் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆயுதப்படை காவலர் தனது மகளுக்கு மது போதையில் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து, அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் காவலர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
த.வெ.க அரசு பொறுப்பேற்ற உடனே, பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண்’ அதிரடிப் படை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்து இருந்தார். அதன்படி, சிங்கப்பெண் அதிரடிப் படை உருவாக்கப்பட்டு, அவசர அழைப்புக்கு 1091 என்ற பிரத்யேக எண்ணும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு மாணவி அளித்த புகாரின் பேரில் தந்தையை கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: