ஞாயிறு, 7 ஜூன், 2026

இரவில் தொடரும் மின் தடை ; சென்னை ஈ.சி.ஆர் சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் ஸ்தம்பித்த போக்குவரத்து !!!

SHARE

 இரவில் தொடரும் மின் தடை ; சென்னை ஈ.சி.ஆர் சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் ஸ்தம்பித்த போக்குவரத்து !!!

முட்டுக்காடு பகுதியில் இரவில் சுமார் 5 மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஈ.சி.ஆர் சாலையில் அமர்ந்து சென்னைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஈ.சி.ஆர் சாலை முட்டுக்காடு பகுதியில் இரவு 8 மணி அளவில் மின்சாரம் தடைப்பட்ட நிலையில், சுமார் 3 மணி நேரமாகியும் மீண்டும் மின்சாரம் அளிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கொசுக்கடியில் நீண்ட நேரமாக அவதி அடைந்தனர். இதனை அடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது, மின்வாரிய அதிகாரிகள் இது எங்களுடைய பிரச்சனை இல்லை என கூறி உள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட அப்பகுதிவாசிகள் இரவு 11 மணி அளவில் ஈ.சி.ஆர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், புதுச்சேரி - சென்னை பிரதான சாலையிலும், சென்னை - புதுச்சேரி பிரதான சாலையிலும் வாகனங்கள் வெகுதூரத்திற்கு அணிவகுத்து நின்றன. சாலையின் இருப்புறமும் கூட்டம் கூட்டமாக மக்கள் நின்ற நிலையில், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தின் காரணமாக, ஈ.சி.ஆர் சாலை வழியாக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உருவானது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காவல்துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாள்தோறும் இதே நிலை நீடிப்பதாகவும், மின் தடையால் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் என ஒட்டுமொத்த மக்களும் கடுமையாக அவதிப்பட்டு வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து கேள்வி கேட்டால், மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்து, திருப்போரூர் த.வெ.க எம்.எல்.ஏ விஜயராஜ் சம்பவ இடத்திற்கு வந்து மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், மின்வாரிய அதிகாரிகளை செல்ஃபோனில் தொடர்பு கொண்டு பேசினார்.

இதனை அடுத்து, காவல் துறை அதிகாரிகள் மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று அப்பகுதிக்கு மின்சாரம் அளிக்க அறிவுறுத்திய நிலையில், நள்ளிரவு 1 மணி அளவில் மின்சாரம் வழங்கப்பட்டது. இதன் பின்னர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் 5 மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பான சூழல்நிலை நிலவியது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: