சனி, 25 ஜூலை, 2026

கோவை நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ரயில் மறியல் முயற்சி – 20"க்கும் மேற்பட்டோர் கைது..

SHARE

கோவை நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ரயில் மறியல் முயற்சி – 20"க்கும் மேற்பட்டோர் கைது...

நீட் விலக்கு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் தனி மசோதாவை மீண்டும் நிறைவேற்றி, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தல்..

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், டெல்லியில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது காவல்துறையினர் கடுமையாக தாக்குதல் நடத்தியதாகக் கூறி அதனை கண்டித்தும், திராவிடத் தமிழர் கட்சியினர் கோவையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை எஸ்.பி.ஐ வங்கி பகுதியில் இருந்து ரயில் நிலையத்தை நோக்கி பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள், "நீட்டை ரத்து செய்", "ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்", "டெல்லியில் போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை தாக்குதலை கண்டிக்கிறோம்" உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.

ரயில் நிலையத்தை நோக்கி முன்னேறிய போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இருப்பினும், போராட்டக்காரர்கள் தடுப்புகளை தள்ளிவிட்டு ரயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றதால், அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய திராவிடத் தமிழர் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதி தமிழன் கூறியதாவது ;-

நீட் தேர்வு முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், அதில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும், 2026-ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு தொடர்பாக தனி மசோதாவை நிறைவேற்றி, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

நீட் விலக்கு தொடர்பாக ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், திராவிடத் தமிழர் கட்சியின் போராட்டங்கள் மேலும் தீவிரமடையும் என்றும், மாநிலம் முழுவதும் அடுத்தகட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் கட்சியினர் எச்சரிக்கை விடுத்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: