கடல் கடந்த சோகம்... வியட்நாம் படகு விபத்தில் பலியான தமிழக வாலிபர்கள்: கோவை கொண்டு வரப்பட்ட 3 பேரின் உடல்கள் - கண்ணீர் மல்க சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு !!!
"வறுமையில் வாடும் குடும்பத்திற்கு அரசு வேலை தரணும்" - லாவா மொபைல் நிறுவன டூர் சென்ற போது நேர்ந்த விபரீதம் - உடல்களைப் பெற்றுக்கொண்டு நண்பர்கள் கண்ணீர் பேட்டி!
வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில் 3 பேரின் உடல்கள் விமானம் மூலம் கோவை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வியட்நாமில் ஏற்பட்ட படகு கவிழ்ந்த விபத்தில் 6 தமிழர்கள் உயிரிழந்தனர்.முதற்கட்டமாக வியட்நாமிலிருந்து விமானத்தின் மூலம் மூன்று பேரின் உடல்கள் கொண்டு வரப்பட்டது.
இதில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா, பாலாஜி மற்றும் அழகுராஜன் ஆகியோர் உடல் மாவட்ட நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தி ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து மதியம் 2 மணிக்கு மற்றொரு விமானத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ஜெயவேல், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முருக பிரபு ஆருமுகம், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் சுந்தரராஜன் ஆகிய மூன்று பேரில் உடல்கள் கோவை விமான நிலையம் கொண்டு வரப்பட உள்ளது.
தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் அந்தந்த மாவட்ட நிர்வாகம், வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். உடல்கள் வந்தடைந்ததும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, உறவினர்களின் முன்னிலையில் ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன.
திருச்சியைச் சேர்ந்த அழகுராஜன், வியட்நாமில் ஏற்பட்ட படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அவரது உடலைப் பெற கோவை விமான நிலைய சரக்ககத்திற்கு வந்த நண்பர் வேல்முருகன், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நடவடிக்கை திருப்திகரமாக இருந்ததாக தெரிவித்தார்.
மேலும், வறுமையில் உள்ள அழகுராஜனின் குடும்பத்திற்கு நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். லாவா நிறுவனத்தில் சேல்ஸ் மேனேஜராக பணியாற்றிய அழகுராஜன், அந்நிறுவனத்தின் சார்பில் வியட்நாம் சுற்றுலா சென்றபோது இந்த விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: