சனி, 4 ஜூலை, 2026

திருப்பரங்குன்றம் மலை சர்வே விவகாரம்; தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 4 வாரம் அவகாசம் !!!

SHARE

 திருப்பரங்குன்றம் மலை சர்வே விவகாரம்; தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 4 வாரம் அவகாசம் !!!

திருப்பரங்குன்றம் மலையை முழுவதும் சர்வே செய்ய 4 வாரம் அவகாசம் அளித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டு உள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனுத் தாக்கல் செய்து இருந்தார்.

அதில், "திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதையும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொணரவும், தொல்லியல் துறையிடம் அனுமதி பெற்ற பிறகே திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் கோரி வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி புதிதாக மனு அளிக்கவும், அதனை அதிகாரிகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

ஆனால் எனது மனுவை பரிசீலித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், "மலையை அளவீடு செய்ததில், சில இடங்களில் முரண்பாடுகள் இருப்பது போல் தோன்றுகின்றது. எனவே அவற்றை மீண்டும் சர்வே செய்ய வேண்டும். ஆகவே அதற்கு 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும்" என கோரப்பட்டது.

அதை அடுத்து நீதிபதிகள், மலை அளவீடு அறிக்கையில் ப்ரைவி கவுன்சிலின் உத்தரவுக்கு பிறகு குறிப்பாக மலை மீது ஏதேனும் விரிவாக்க பணிகள் நடைபெற்று இருந்தால், அதுதொடர்பான விபரங்களையும் அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: