சனி, 4 ஜூலை, 2026

வழக்கு விவரங்களை தாக்கல் செய்யாத மத்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி !!!

SHARE

 வழக்கு விவரங்களை தாக்கல் செய்யாத மத்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி !!!

வழக்கு ஒன்றில் விபரங்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டு இருந்த நிலையில் அதனை தாக்கல் செய்யாத காரணத்தால் மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை இணைச் செயலாளர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர் 720 கிராம் ஹெராயின் போதைப்பொருளைக் கடத்தியதாக கடந்த 2015- ஆம் ஆண்டு இலங்கையில் கைது செய்யப்பட்டு அந்த நாட்டு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் இந்தியா - இலங்கை இடையிலான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின்படி, கடந்த 2016- ஆம் ஆண்டு ஜாகீர் உசேன் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கபட்டார். ஜாகீர் உசேனை 2022- ஆம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டு இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் தனது தந்தையை விடுவிக்காமல் தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளதாகக் கூறி ஜாகீர் உசேனின் மகன் சமீர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்தியாவில் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்க முடியும் என்கிற நிலையில் 2022- ஆம் ஆண்டு வரை தண்டனை அனுபவிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது குறித்தும், ஜாகீர் உசேன் நாடு கடத்தப்பட்ட போது, இந்தியா- இலங்கை இடையிலான கடிதப் போக்குவரத்து தொடர்பான விபரங்களைத் தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்த விபரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாத காரணத்தால், மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை இணைச் செயலாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் 50,000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

மேலும், அந்த அபராதத் தொகையை இரு அதிகாரிகளும் இணைந்து நான்கு வாரங்களுக்குள் உயர்நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கு செலுத்தவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் ஜூலை 9- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
SHARE

Author: verified_user

0 கருத்துகள்: