புதன், 22 ஜூலை, 2026

முதல்வர் விஜய் பெரம்பூர் வெற்றியை எதிர்த்து வழக்கு: தேர்தல் நடத்தும் அதிகாரி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு !!!

SHARE

 முதல்வர் விஜய் பெரம்பூர் வெற்றியை எதிர்த்து வழக்கு: தேர்தல் நடத்தும் அதிகாரி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு !!!

சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் நடத்தும் அதிகாரி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப மனுதாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டு உள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் த.வெ.க வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்த நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார்.

இந்நிலையில், முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, தி.மு.க வேட்பாளர் ஆர்.டி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.

அதில், “வாக்காளர்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் மூலமாக த.வெ.க கட்சிக்கு வாக்களிக்க ஒவ்வொரு குழந்தைகளும், அவர்களைத் பெற்றோர்களை வலியுறுத்த வேண்டும் என முதலமைச்சர் விஜய் தேர்தல் பரப்புரையில் பேசி உள்ளார்.

இதன் மூலம் தேர்தல் ஆணைய விதிமுறைக்கு எதிராக குழந்தைகளை மன ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் த.வெ.க கட்சிக்கு ஆதரவு தர தூண்டி உள்ளார். மேலும், தேர்தல் பிரச்சார செலவுகளை வேண்டுமென்றே விஜய் மறைத்து உள்ளார். பெரம்பூரில் தேர்தல் அலுவலகம் அமைக்க ரூ. 10 லட்சம் செலவு ஆனதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், அனைத்து ஏற்படுகளையும் செய்து முடிக்க குறைந்தது ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டு உள்ளது. அதையும் விஜய் திட்டமிட்டே மறைத்து உள்ளார். மேலும் 2011 முதல் 2024 வரை 3 கோடியே 44 லட்சத்து 46 ஆயிரத்து 642 கோடி ரூபாய் அரசுக்கு வருமான வரியாக செலுத்தவில்லை என்பதையும் பிரமாண பத்திரத்தில் மறைத்து உள்ளார்” என குறிப்பிட்டு உள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன் இன்று (ஜூலை 21) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.டி சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்டு வில்சன், முதலமைச்சர் விஜய், இந்திய தேர்தல் ஆணையம் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

இதனை அடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, “வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ள யாருக்கு நோட்டீஸ் வழங்கவில்லையோ ? அவர்களுக்கும் நோட்டீஸ் வழங்க வேண்டும். பெரம்பூர் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கும் நோட்டீஸ் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.


இதேபோல, திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து தி.மு.க வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தொடர்ந்த மற்றொரு தேர்தல் வழக்கு, நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: