சனி, 4 ஜூலை, 2026

இரு பிரிவினர் மோதலை காரணம்காட்டி கோயிலை மூடுவதா? உயர் நீதிமன்றம் அதிருப்தி !!!

SHARE

 இரு பிரிவினர் மோதலை காரணம்காட்டி கோயிலை மூடுவதா? உயர் நீதிமன்றம் அதிருப்தி !!!

இருபிரிவினர் இடையேயான மோதல் காரணமாக கோயிலை மூடுவது என்பது சூழலை சமாளிக்க முடியாத அரசு அதிகாரிகளின் நிர்வாக திறமையின்மையை பிரதிபலிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.

இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் தூட்டப்பூவாதி கிராமத்தில் உள்ள கோயில்களை மூடி வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கோவிலின் அறங்காவலரும், பூசாரியுமான செல்வராஜ் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, "மூன்று கிராமங்களை சேர்ந்த மக்கள், பிரச்சனைக்குரிய கோயில் உள்ளிட்ட பன்னிரெண்டு கோயில்களை கட்டியுள்ள நிலையில், அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த சிலர் அரசியல் உள்நோக்கத்துடன் புதிய கோயில் கட்டவேண்டும் என பிரச்சனை ஏற்படுத்துகின்றனர். கோயில் தற்போது திறக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்" என்று மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி, "பொதுமக்கள் வழிபாட்டுக்காக நிறுவப்படும் கோயில்களில் மக்கள் வழிப்படுவதை அரசின் இந்து சமய அறநிலையத் துறையோ அல்லது தனி நபர்களோ தடுக்க முடியாது. சட்டம் ஒழுங்கை காரணம்காட்டி கோயில் மூடப்படக் கூடாது. பொதுமக்கள் வழிபடுவதற்காக அனைத்து நேரத்திலும் கோயில் திறந்து இருக்க வேண்டும். இரு பிரிவினர் இடையேயான மோதல் காரணமாக கோயிலை மூடுவது என்பது சூழலை சமாளிக்க முடியாத அரசு அதிகாரிகளின் நிர்வாக திறமையின்மையை பிரதிபலிக்கிறது" என்று கருத்து தெரிவித்தார்.

மேலும், "சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம் என கூறி உள்ள நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, காலவரையின்றி பிரச்சனை நீடித்தால் இரு பிரிவினர் இடையே சமாதானம் ஏற்படும் வரை இந்து சமய அறநிலையத்துறையே கோயில் நிர்வாகத்தை கையில் எடுக்கலாம்" எனவும் உத்தரவிட்டார்.
SHARE

Author: verified_user

0 கருத்துகள்: