அமுதன் கொலை வழக்கு பின்னணி : கோவையில் 128 கல்லூரி நிர்வாகிகளுடன் காவல் துறை அதிரடி ஆலோசனைக் கூட்டம் !!!
போதைப் பொருள் தடுப்பு, சைபர் பிரிவு, சி.சி.டி.வி கண்காணிப்பு: மாணவர் பாதுகாப்பிற்குப் போலீஸார் வழங்கிய கெடுபிடி அறிவுறுத்தல்கள் !!!
கோவை, இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவன் அமுதன் சக மாணவர்களால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், கோவையில் உள்ள 128 கல்லூரிகளின் நிர்வாகிகளுடன் காவல் துறை உயர் அதிகாரிகள் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி உள்ளனர்.
கோவை, பொள்ளாச்சி சாலையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்த அமுதன் என்ற மாணவன், தனது நண்பருடன் சென்று கொண்டு இருந்த போது சில மாணவர்களால் வழிமறித்துத் தாக்கப்பட்டு உயிரிழந்தான்.
இச்சம்பவம் குறித்துச் செட்டிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கல்லூரி மாணவர்களும் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.
கல்லூரியில் போதைப் பொருள் புழக்கம் குறித்துக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்ததால் தான் தனது மகன் அடித்துக் கொல்லப்பட்டதாக அமுதனின் பெற்றோர் குற்றம் சாட்டினர். (இதை கல்லூரி நிர்வாகம் மறுத்து உள்ளது).
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் சீனியர் மாணவர்களைத் தாக்கிச் செல்போன் பறித்ததாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட முன்விரோதமே இந்த மோதலுக்கும், தாக்குதலுக்கும் காரணமாக இருக்கலாம் எனப் போலீஸார் தெரிவித்து உள்ளனர்.
மாணவர் அமுதனின் உயிரிழப்பைத் தொடர்ந்து, மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் கல்லூரி வளாகங்களில் குற்றங்களைத் தடுக்கக் கோவை கொடிசியா வளாகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை மாநகரக் காவல் ஆணையர் கண்ணன், மேற்கு மண்டலக் காவல் துறை தலைவர் (IG) ரம்யா பாரதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், கோவையைச் சேர்ந்த 128 கல்லூரிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் அனைத்துக் கல்லூரிகளிலும் தனியாகச் சைபர் பிரிவு தொடங்கப்பட வேண்டும். சமூக வலைதளங்களில் மாணவர்கள் இடையே ஏற்படும் மோதல்கள், சைபர் குற்றங்கள் கல்லூரி வளாகத்திற்குள் வன்முறையாக மாறாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மாதாந்திர ஆய்வுக் கூட்டம், கல்லூரிகளில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் மற்றும் மாணவர்களின் நடவடிக்கைகள் தொடர்பாகக் கல்லூரி நிர்வாகங்கள் தரும் தகவல்களின் அடிப்படையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அல்லது காவல் ஆணையர் தலைமையில் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும்.
கல்லூரி மற்றும் விடுதி வளாகங்கள், நுழைவாயில்களில் போதிய CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுச் சீராக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். கல்லூரி நிர்வாகம் சார்பில் 'பறக்கும் படைகள்' (Flying Squads) அமைத்து, மாணவர்கள் தங்கி உள்ள விடுதிகளில் திடீர் சோதனைகள் நடத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு கல்லூரியிலும் தனியாக ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட வேண்டும். மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கத் தேவையான நேரங்களில் மனநல ஆலோசகர்களைக் கொண்டு ஆலோசனைகள் வழங்க வேண்டும். சிறிய குழுக்களாக மாணவர்களைப் பிரித்துத் தனி வழிகாட்டிகளை நியமிக்க வேண்டும்.
மாணவர்கள் ஆன்லைன் சூதாட்டம், போதைப் பொருள் பயன்பாடு அல்லது சைபர் குற்றங்களில் ஈடுபடுவது தெரியவந்தாலோ, அவர்களின் நடவடிக்கையில் திடீர் மாற்றம் ஏற்பட்டாலோ உடனடியாகப் பெற்றோருக்கும் காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
மாணவன் அமுதன் உயிரிழந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், காவல் துறை வழங்கி உள்ள இந்த அதிரடி அறிவுறுத்தல்கள் வெறும் காகித அளவிலேயே நிற்காமல் கல்லூரிகளில் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா ? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

0 கருத்துகள்: