வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

கோவை அருகே தோட்டத்தில் ரகசியமாகக் கஞ்சா செடி வளர்த்த 2 பேர் கைது !!!

SHARE

 கோவை அருகே தோட்டத்தில் ரகசியமாகக் கஞ்சா செடி வளர்த்த 2 பேர் கைது !!!

கோவை மாவட்டம், சிறுமுகை அருகே தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் ரகசியமாகக் கஞ்சா செடிகளைப் பயிரிட்டு, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரைச் சிறுமுகை போலீஸார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாடு மற்றும் சட்டவிரோத விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பவன் K. ரெட்டி உத்தரவின் பேரில் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிறுமுகை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராமபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் கஞ்சா செடிகள் ரகசியமாக வளர்க்கப்பட்டு வருவதாகச் சிறுமுகை காவல் ஆய்வாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் குறிப்பிட்ட தோட்டத்திற்குச் சென்று அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.

போலீஸார் நடத்திய தீவிர சோதனையில், அந்தத் தோட்டத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்த சிறுமுகையைச் சேர்ந்த பாபு (63) என்பவர், யாருக்கும் சந்தேகம் வராத வகையில் தோட்டத்தில் 2 கஞ்சா செடிகளைப் பயிரிட்டு வளர்த்து வந்தது அப்பட்டமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அங்கிருந்த 2 கஞ்சா செடிகளையும் போலீஸார் வேரோடு பிடுங்கிப் பறிமுதல் செய்தனர்.

மேலும், பாபு மற்றும் அவரது கூட்டாளியான அன்னூர் ஆலாங்குட்டை பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (39) ஆகிய இருவரிடம் இருந்தும் விற்பனைக்காக வைத்து இருந்த மொத்தம் 250 கிராம் கஞ்சாவையும் போலீஸார் கைப்பற்றினர்.

இச்சம்பவம் குறித்துச் சிறுமுகை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், பாபு மற்றும் யுவராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாகக் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பயிரிடுதல், வைத்திருத்தல், விற்பனை செய்தல் மற்றும் கடத்துதல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் எனக் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பவன் K. ரெட்டி எச்சரித்து உள்ளார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: