நள்ளிரவில் உயிரைப் பணயம் வைத்து அட்ராசிட்டி ; ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் ‘ரேஷ் டிரைவிங்’ - கோவையில் நெட்டிசன்களை கொதிக்க வைத்த வீடியோ !!!
சோதனைச் சாவடியைக் கடந்து அதிவேக சாகசம்: கார் கேமராவில் பதிவான அதிர்ச்சி காட்சிகள் !!!
கோவை, திருச்சி சாலையில் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று வாலிபர்கள், நள்ளிரவில் அதிவேகமாகவும் தாறுமாறாகவும் வாகனத்தை ஓட்டிச் சென்ற அதிர்ச்சி வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாநகரப் பகுதியில் இரவு நேரங்களில் இளைஞர்கள் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனங்களை இயக்கி சாகசங்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், கோவை - திருச்சி சாலையில் நள்ளிரவு நேரத்தில் காமாட்சிபுரம் சோதனைச் சாவடி பகுதியில் இருந்து சூலூர், பாப்பம்பட்டி பிரிவு வரை ஒரே பைக்கில் மூன்று வாலிபர்கள் ஆபத்தான முறையில் பயணித்து உள்ளனர்.
சாலையில் போக்குவரத்து குறைவாக இருந்ததைப் பயன்படுத்தி, இருசக்கர வாகனத்தை வலது மற்றும் இடதுபுறமாகத் தாறுமாறாகத் திருப்பி, அதிவேகத்தில் ‘ரேஷ் டிரைவிங்’ செய்து அச்சுறுத்தும் வகையில் சென்று உள்ளனர்.
இவர்களுக்குப் பின்னால் வந்த காரின் முகப்பில் பொருத்தப்பட்டு இருந்த டேஷ்போர்டு கேமராவில் இந்த அதிர்ச்சி காட்சிகள் அனைத்தும் பதிவாகி உள்ளது.
போலீசாரின் சோதனைச் சாவடியையும் பொருட்படுத்தாமல், காவலர்களின் கண்ணெதிரிலேயே இந்த இளைஞர்கள் விதிகளை மீறிச் சென்று உள்ளனர்.
இரவு நேரங்களில் இதுபோன்று கட்டுப்பாடின்றி அதிவேகமாக வாகனங்களை இயக்கும் நபர்களால், எதிரே வரும் பிற வாகன ஓட்டிகளுக்கும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ பதிவைக் கொண்டு, ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கிய அந்த மூன்று வாலிபர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீது போக்குவரத்துப் பிரிவு காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்: