ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ திறன் பயிற்சி - தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேச்சு !!!
நாட்டின் 80 வது சுதந்திர தின விழாவையொட்டி, டெல்லி செங்கோட்டையில் 13 வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இந்திய நாட்டின் 80 வது சுதந்திர தின விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சுதந்திர விழா கோலாகலமாக நடைபெற்றது.
2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய பயணத்தை முன்னெடுத்துச் செல்வதில் இளைஞர்களின் பங்களிப்பை கொண்டாடும் வகையிலும் இந்தாண்டு சுதந்திர தின விழா நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
செங்கோட்டைக்கு வருகைத்தந்த பிரதமர் நரேந்திர மோடியை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். அதன் தொடர்ச்சியாக இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளின் ராணுவ அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றார்.
தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை பிரதமர் மோடி ஏற்றி மரியாதை செலுத்தினார். முன்னதாக வந்தே மாதரம் பாடத்தில் 150 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக முதன் முறையாக சுதந்திர தின விழாவில் வந்தே மாதரம் பாடம் இசைக்கப்பட்டது.
கொடி ஏற்றத்தைத் தொடர்ந்து தேசியக் கீதம் இசைக்கப்பட்டு, இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் மூலம் தேசியக்கொடி பறக்க மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், 2,500 என்.சி.சி உறுப்பினர்கள், எனது பாரத் தன்னார்வலர்கள் மற்றும் 5,000 மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக வந்தே மாதரம் பாடப்பட்டு, தேசிய கீதம் பாடப்பாட்டது.
சுதந்திர தின விழாவில் உரையில் பிரதமர் மோடி, ஐந்து புதிய அணுமின் உலைகள், ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ திறன் பயிற்சி, போட்டித் தேர்வு இளைஞர்கள் இலவச ஆன்லைன் பயிற்சி உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, “இன்று, ஒவ்வொரு இதயமும் 'வந்தே மாதரம்' எனும் தாளத்திற்கு ஏற்பத் துடிக்கிறது. இன்று, ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி உள்ளது. ஒவ்வொருவருக்குள்ளும் மூவர்ணக் கொடி உள்ளது. இந்தச் சுதந்திர தினத்தன்று, அனைத்துச் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். சுதந்திரத்திற்குப் பிறகு, செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து 'வந்தே மாதரம்' முழக்கம் எதிரொலித்த தருணம். இன்று இந்த விழாவில் கலந்து கொண்டு உள்ள அனைவருக்கும் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும்.
2047-ம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற பெரும் கனவை இந்தியா கொண்டு உள்ளது. அந்த முயற்சியில் நாம் உறுதியுடன் இருக்கும். இது நமது துணிச்சலின் அடையாளமாக வெளிப்படுகிறது.
சமீபத்தில், நாட்டின் சில பகுதிகள் வெள்ளம் மற்றும் நிலச் சரிவுகளால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. அவர்களின் துயரத்தில் நாங்கள் ஆழ்ந்த அனுதாபம் கொள்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன். நாங்களும் ஒட்டுமொத்த தேசமும் அவர்களுக்குத் துணையாக நிற்கிறோம்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளில், பாதுகாப்புத் துறை உற்பத்தி நான்கு மடங்காகவும், கதர் மற்றும் கிராமத் தொழில் உற்பத்தி ஐந்து மடங்காகவும், மின்னணு சாதன உற்பத்தி ஏழு மடங்காகவும் அதிகரித்து உள்ளன. அலைபேசி உற்பத்தி 33 சதவீதமும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 100 சதவீதமும் அதிகரித்து உள்ளன. சிறிய கனவுகள் இனி போதுமானதாக இருக்காது. நாம் பெரிய கனவுகளைக் காண வேண்டும்.
ஏனெனில், பெரிய கனவுகள் நமது சிந்தனையை விரிவுபடுத்துவதோடு, நமது தொலைநோக்குப் பார்வையின் எல்லைகளையும் அகலமாக்குகின்றன. நமது உறுதிப்பாடு அசைக்க முடியாததாக இருக்க வேண்டும். அத்தகைய உறுதியான மனநிலை இருக்கும் போது, இடர்பாடுகள் மற்றும் பேரிடர்களுக்கு மத்தியிலும் கூட முன்னேற்றத்திற்கான பாதையை வகுக்கும் ஆற்றல் இயல்பாகவே உருவாகிறது.
கடந்த 12 ஆண்டுகளில் பலத்தரப்பட்ட மக்கள், நாட்டை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல அசைக்க முடியாத உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் சாத்தியமான அனைத்து வழிகளிலும் பாடுபட்டு உள்ளனர். இத்தகைய முயற்சிகளை நான் மரியாதையுடன் அங்கீகரிக்கிறேன்.
நாம் சுயசார்பு கொண்டவர்களாக மாறி, நமது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இன்று, ஒவ்வொரு இந்தியரும் 'மேக் இன் இந்தியா' மற்றும் 'சுதேசி' போன்ற முன்னெடுப்புகளுடன் இணைந்து வருகின்றனர்” எனக் கூறினார்.
மேலும், “ஆற்றல் பாதுகாப்பு என்பது காலத்தின் தேவையாகும். 2047-ம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் அணுசக்தித் திறனை எட்டும் இலக்குடன் நாம் முன்னேறி வருகிறோம். இந்த தசாப்தத்தில் ஐந்து புதிய அணுமின் உலைகளைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர இலக்கு வைத்து உள்ளோம்.
நாடு சுதந்திரம் அடைந்தது, அந்தச் சுதந்திரம் பல கனவுகளுடன் கூடியதாக இருந்தது. இருப்பினும், நம்மால் வேகமெடுக்கவோ அல்லது முன்னேற்றத்திற்கான உத்வேகத்தைப் பெறவோ முடியவில்லை. 'நடப்பது நடக்கட்டும்', 'இப்படியே போகட்டும்', 'எப்படியாவது நடந்துவிடும்', 'அப்போது பார்த்துக்கொள்ளலாம்' என்ற மனப்பான்மையிலேயே நாம் தேங்கி நின்றோம். 2014-ம் ஆண்டு வரை உலகம் நம்மை "பலவீனமான ஐந்து நாடுகள்" என்ற வரிசையில் வைத்துப் பார்க்கும் நிலைக்குத் தள்ளியது.
இத்தகைய சூழலுக்கு மத்தியிலும், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா புதியதொரு உத்வேகத்தைப் பெற்று உள்ளது. நாம் மிக வேகமாக முன்னேறி வருகிறோம். கடந்த 12 ஆண்டுகளில், பாதுகாப்புத் துறை உற்பத்தி கிட்டத்தட்ட நான்கு மடங்காகவும், கதர் மற்றும் கிராமப்புறத் தொழில்களின் உற்பத்தி ஏறக்குறைய ஐந்து மடங்காகவும் அதிகரித்து உள்ளது.
மின்னணு சாதனங்களின் உற்பத்தி கிட்டத்தட்ட ஏழு மடங்கு விரிவடைந்து உள்ளது. நவீன ரயில் பெட்டிகளின் உற்பத்தி 21 மடங்கும், அலைபேசி உற்பத்தி 33 மடங்கும் அதிகரித்து உள்ளன. அதையும் தாண்டி, டிஜிட்டல் தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறைகளிலும் நாம் முத்திரை பதித்து உள்ளோம்.
இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நான்கு மடங்காகவும், காப்புரிமை அங்கீகாரங்கள் நான்கு மடங்காகவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நூறு மடங்காகவும் உயர்ந்து உள்ளன. சாமானிய குடிமக்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதிலும் நாம் அதே தீவிரத்துடன் பணியாற்றி உள்ளோம். முன்பை விட சராசரியாக ஆண்டுக்கு 15 மடங்கு வேகத்தில் குழாய் வழி குடிநீர் இணைப்புகளை வழங்கி உள்ளோம்.
முந்தைய ஆண்டு வேகத்தை விட ஆறு மடங்கு வேகத்தில் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. ஏழைகளுக்கு நான்கு மடங்கு வேகத்தில் கழிப்பறைகளை அமைத்து உள்ளோம். அதே போல், பின் தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு மூன்று மடங்கு வேகத்தில் வீடுகளை வழங்கி உள்ளோம். நிர்வாகத்திலும் நாடு மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்து உள்ளது.
ஆயிரக் கணக்கான விதிமுறை நடைமுறைகள் நீக்கப்பட்டு உள்ளன. மேலும் காலாவதியான நூற்றுக் கணக்கான சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. கடந்த நூற்றாண்டின் சட்டங்களைச் சார்ந்திருப்பதன் மூலம் 21-ம் நூற்றாண்டில் முன்னேறிச் செல்ல முடியாது. நவீன உள்கட்டமைப்பை உருவாக்க மெட்ரோ ரயில் கட்டமைப்புகளை விரிவுபடுத்தினோம் மற்றும் பொதுப் போக்குவரத்து வசதிகளை வலுப்படுத்தினோம். இவை அனைத்தும் கடந்த பத்தாண்டுகளுக்குள் நிகழ்ந்து உள்ளன.
ஆத்மநிர்பர் பாரத் (சுயசார்பு இந்தியா) என்பது மிக அவசியமான ஒன்றாகும். அதனால் தான், இந்தியா இனி பிற நாடுகளைச் சார்ந்து இருக்கக் கூடாது என்றும், நாம் சுயசார்பு கொண்டவர்களாக மாற வேண்டும் என்றும் கடந்த சில ஆண்டுகளாக அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
அதற்காக நமது சொந்தத் திறன்களை நாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப உலகில், 'சிப்'களின் முக்கியத்துவத்தை நாம் நன்கு அறிவோம். மின்னணுப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் அல்லது போக்குவரத்து அமைப்புகள் என எதுவாக இருந்தாலும், சிப்கள் இன்றியமையாதவை. அவை இல்லையென்றால் உலகம் ஸ்தம்பித்து விடும்.
இத்துறையில் இந்தியா சுயசார்பை நோக்கி முன்னேறி உள்ளது. ஏற்கனவே, மூன்று பெரிய செமிகண்டக்டர் ஆலைகள் நிறுவப்பட்டு உள்ளன. மேலும், ஏற்றுமதிக்கான உற்பத்திப் பணிகளும் தொடங்கப்பட்டு விட்டன. வரும் 7 அல்லது 8 ஆண்டுகளில், மேலும் ஐந்து முதல் எட்டு செமிகண்டக்டர் ஆலைகள் மிக விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளன” என்று குறிப்பிட்டார்.
மேலும் பேசுகையில், “கடந்த 12 முதல் 20 ஆண்டுகளில் நாம் பல ஆபத்துகளை எதிர்கொண்டு உள்ளோம். கொரோனா பாதிப்பில் இருந்து நாம் மீண்டு வந்த உடனேயே, உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியப் பகுதிகளில் தாக்குதல் தொடங்கின. ஒரு பதற்றமான சூழல் நிலவியது. எதிர்காலம் குறித்துக் கணிப்பவர்கள் என்னென்னவோ கணிப்புகளைச் சொன்னார்கள். தடுப்பூசிகள் கிடைக்காது என்றும், பெட்ரோல், டீசல் மற்றும் உரங்கள் கிடைக்காது என்றும் வதந்திகளைப் பரப்பி, நாட்டை அச்சத்தில் ஆழ்த்துவதில் சிலர் மகிழ்ச்சி கண்டனர்.
இன்று நம் நாடு கச்சா எண்ணெயைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்குக் காரணம் நமது தவறான சிந்தனைப் போக்கு தான். நமது கடற்கரைப் பகுதியில் 99 சதவீதத்தை அனுமதிக்கப்படாத பகுதியாக நாமே அறிவித்து இருந்தோம் என்பது உங்களுக்கு ஆச்சரியமளிக்கலாம். ஒரு காலத்தில் அனுமதிக்கப்படாத பகுதிகளாக கருதப்பட்ட இடங்கள், இன்று முன்னேற்றத்திற்கான பகுதிகளாக மாறி உள்ளன.
ஃபாஸ்ட் பிரீடர்' அணு தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றதன் மூலம் இந்தியா இந்த ஆண்டு ஒரு முக்கிய மைல்கல்லை எட்டி உள்ளது. இது அணு எரிபொருள் துறையில் தன்னிறைவை அடைவதற்கான ஒரு பெரும் முன்னேற்றமாகும்.
வரும் நாட்களில் ஒரு துடிப்பான 'குடிமைப் பாதுகாப்பு' கட்டமைப்பை உருவாக்க உள்ளோம் என்பதை இன்று செங்கோட்டையில் இருந்து அறிவிக்கிறேன். நவீன அமைப்புகள் குறித்து அவர்களுக்குப் பயிற்சி அளிப்போம். தற்கால நெருக்கடிகளில் இருந்து குடிமக்களைப் பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? சமகாலச் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட, ஒரு பிரம்மாண்டமான மற்றும் நவீன குடிமைப் பாதுகாப்பு தன்னார்வலர் படையை அரசு உருவாக்க உள்ளது.
இளைஞர்களுக்கான நவீன திறன் வளர்ச்சி குறித்து பேசிய அவர், சமீபத்தில் செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் குறித்த உச்சிமாநாடு நடந்தது. செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டு எல்லை வேகமாக விரிவடைந்து வருகிறது. செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.
வரும் ஆண்டில் ஒரு கோடி இளைஞர்களுக்குச் செயற்கை நுண்ணறிவுத் திறன்களில் பயிற்சி அளித்து, அவர்களை இத்துறையில் உலகிற்குத் தலைமை தாங்கும் வகையில் வலுப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது” என அறிவித்தார். மேலும், அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி வழங்கப்படும் என அறிவித்தார்.
வளர்ச்சி அடைந்த இந்தியா எனும் பயணத்தில் இளைஞர்களுக்குப் பெரும் பங்கு உள்ளது. 'விக்சித் பாரத்'-தின் மிகப்பெரிய பயனாளிகள் நாட்டின் இளைஞர்களாகவே இருப்பார்கள். கடந்த 5 முதல் 7 தசாப்தங்களில் சாதிக்க முடியாதவற்றை, வரவிருக்கும் 5 முதல் 7 ஆண்டுகளில் நாம் சாதிக்க வேண்டும். வரும் ஆண்டுகளில், அரசாங்கம் சீர்திருத்தங்களை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.
நக்சலிசம் மற்றும் மாவோயிசம் ஆகியவை லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழித்தன. இவை அரசியலமைப்பையே கேலிக்கு உள்ளாக்கின. இன்று, நக்சல்-மாவோயிச வன்முறை தனது வலிமையை இழந்து, இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது என்று கூறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
அதை முழுமையாக ஒழிக்கும் திசையில் நாம் முன்னேறி வருகிறோம். ஒரு காலத்தில் நக்சல்களின் குண்டுகள் பாய்ந்தும், நிலம் ரத்தத்தால் நனைந்தும் கிடந்த அதே பகுதிகளில், இன்று வளர்ச்சி, நம்பிக்கை மற்றும் கூட்டு முயற்சியின் அடையாளமான மூவர்ணக் கொடி உயரே பறக்கிறது.
நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், ஏதோ ஒரு காரணத்தினால், கடந்த 40 ஆண்டுகளாக இந்த கனவு மீண்டும் அரசியல் சூழலுக்குப் பலியாகி வந்து உள்ளது.
இன்று செங்கோட்டையின் கொத்தளத்தில் மூவர்ணக் கொடியின் கீழ் நின்று, நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் நான் ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன். பெண்களைக் கௌரவிக்கவும், நமது தாய்மார்களும் சகோதரிகளும் சட்டமன்றங்கள் மற்றும் மக்களவையில் 33 சதவீதப் பிரதிநிதித்துவத்தை விரைவில் பெறுவதை உறுதி செய்யவும் முன்வாருங்கள்.
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது வெறும் எண்களைச் சேகரிப்பது மட்டுமல்ல; அதன் மூலம் பெறப்படும் நுணுக்கமான விவரங்களே கொள்கைகளையும் திட்டங்களையும் வடிவமைக்கின்றன. நீங்கள் வழங்கும் தகவல்கள் எவ்வளவு துல்லியமாக இருக்கிறதோ, அந்தளவுக்கு அது நாடு முன்னேற உதவும். எனவே, நாட்டின் இளைஞர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்து துல்லியமான தகவல்களை வழங்க கேட்டுக் கொள்கிறேன்” எனப் பேசினார்.

0 கருத்துகள்: