வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

"பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை" ; கோவையில் தனியார் பேருந்தை வழிமறித்துப் பெற்றோர் போராட்டம்!

SHARE

 "பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை" ;  கோவையில் தனியார் பேருந்தை வழிமறித்துப் பெற்றோர் போராட்டம்!

 பள்ளி மாணவிகளிடம் கைவரிசை காட்டிய கிளீனரை மடக்கிப் பிடித்த மக்கள்!

​ கோவை, கருமத்தம்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் பேருந்தின் கிளீனர் ஒருவர், பள்ளிக்குச் செல்லும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து தினசரி நூற்றுக் கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளில் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.

​இந்நிலையில், அப்பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளி பேருந்தில் தினமும் பயணிக்கும் பள்ளிச் சிறுமி ஒருவரிடம், அந்தப் பேருந்தின் கிளீனர் தொடர்ந்து தவறான எண்ணத்துடன் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்துத் தனது பெற்றோரிடம் அழுது கொண்டே விவரத்தைக் கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், இன்று வழக்கம் போல வந்த அந்தத் தனியார் பள்ளி பேருந்தை அரசூர் பகுதியில் திடீரென வழிமறித்து நிறுத்தினர்.

​தொடர்ந்து, பள்ளிச் சிறுமியிடம் அசிங்கமாக நடந்துகொண்ட அந்தப் பேருந்து கிளீனரிடம் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சரமாரியாகக் கேள்விகள் கேட்டுப் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருமத்தம்பட்டி காவல் துறையினர், ஆவேசத்தில் இருந்த பொதுமக்களைச் சமாதானப்படுத்தினர்.

​தொடர்ந்து, பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் பள்ளி பேருந்து கிளீனரைப் போலீஸார் உடனடியாகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இச்சம்பவம் கருமத்தம்பட்டி பகுதியில் தாய்மார்கள் மற்றும் பெற்றோர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: