செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

"குட்டிகள் கடக்க வழிமறித்த தாய் யானை" ; கோவையில் சாலையில் தாய் பாசத்தை உணர்த்திய நெகிழ்ச்சி சம்பவம்!

SHARE

 "குட்டிகள் கடக்க வழிமறித்த தாய் யானை" ; கோவையில் சாலையில் தாய் பாசத்தை உணர்த்திய நெகிழ்ச்சி சம்பவம்!

வாகனங்களை நிறுத்தி பாதுகாப்பு அரணான காட்டு யானை: வீடியோ வைரல் - வனத்துறை எச்சரிக்கை!

கோவை, காரமடை அருகே வெள்ளியங்காடு - முள்ளி சாலையில் தனது குட்டி யானைகள் பாதுகாப்பாகச் சாலையைக் கடந்து செல்ல வாகனங்களை வழிமறித்து அரணாக நின்ற ஒற்றைக் காட்டு யானையின் தாய் பாசத்தை உணர்த்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் இருந்து காரமடை வழியாக நீலகிரி மாவட்டத்திற்குச் செல்லும் வெள்ளியங்காடு - முள்ளி சாலை அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்து உள்ளது. தற்போது எல் நினோ தாக்கத்தால் காரமடை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால், உணவு மற்றும் தண்ணீரைத் தேடி யானை, மான், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி இச்சாலையைக் கடப்பது வழக்கம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் குடும்பத்துடன் காரில் சென்ற நபர் ஒருவர் பில்லூர் அணை அருகே சென்ற போது, திடீரென ஒற்றைக் காட்டு யானை ஒன்று வீதியை மறித்து நின்றதைக் கண்டு வாகனத்தை நிறுத்தி உள்ளார்.

 வாகனத்தை மீண்டும் இயக்க முயன்ற போது, அந்த யானை முன்னோக்கி வந்து வாகனத்தை எச்சரிப்பது போல் மிரட்டி உள்ளது.

அதே வேளையில், வனப்பகுதியில் இருந்து 4 குட்டி யானைகள் சாலையை கடந்து உள்ளன. குட்டிகள் அனைத்தும் பாதுகாப்பாகச் சாலையைக் கடந்து மறுபுறம் உள்ள வனப்பகுதிக்குச் செல்லும் வரை, அந்த ஒற்றை யானை காரை முன்னோக்கிச் செல்ல விடாமல் வழிமறித்து அரணாக நின்று உள்ளது.

குட்டிகள் அனைத்தும் பத்திரமாகச் சென்றதை உறுதி செய்த பிறகு, லேசாக இலை தழைகளை உட்கொண்ட அந்த யானை, காரில் இருந்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பது போல் தனது துதிக்கையை உயர்த்திக் காட்டி விட்டு மெதுவாகக் குட்டிகளுடன் வனப்பகுதிக்குள் சென்றது. இதனை காரில் இருந்த பயணித்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவிட்டு வெளியிட, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில்:

"வெள்ளியங்காடு - முள்ளி சாலையில் மாலை 6 மணிக்கு மேல் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. வறட்சி காரணமாக வனவிலங்குகள் சாலையைக் கடப்பதால், மலைப்பாதையில் செல்வோர் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும்.

வனவிலங்குகளைக் கண்டால் துன்புறுத்தவோ, செல்ஃபி எடுக்கவோ, விரட்டவோ கூடாது. மீறினால் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்து உள்ளார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: