செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

"பேரல் பேரலாக தார், டீசல் கொள்ளை" ; ஆயக்குடி போலீஸாரின் அலட்சியத்தால் திண்டுக்கல்லில் துணிச்சலாக நடக்கும் பகல் கொள்ளை!

SHARE

 "பேரல் பேரலாக தார், டீசல் கொள்ளை" ; ஆயக்குடி போலீஸாரின் அலட்சியத்தால் திண்டுக்கல்லில் துணிச்சலாக நடக்கும் பகல் கொள்ளை!

லாரி டிரைவர்களுடன் கைகோர்த்து ரூ.12,500-க்கு விற்பனை: முதல்வர் & மத்திய அரசுக்கு விடுக்கப்படும் புகார் எச்சரிக்கை!

 திண்டுக்கல் மாவட்டம், பழனி மற்றும் ஆயக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளை மையமாக வைத்து, லாரிகளில் கொண்டு செல்லப்படும் தார் மற்றும் டீசலைப் பேரல் பேரலாகத் திருடும் கும்பலின் சட்டவிரோத நெட்வொர்க் அம்பலமாகி உள்ளது.

குடோன் அமைத்து நூதன திருட்டு:

கொச்சியில் இருந்து மதுரை, திருச்சி, திருநெல்வேலி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களின் தார் மற்றும் டீசல் கொண்டு செல்லப்படுகின்றன.

இவற்றைக் குறிவைத்து, ஆயக்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த மாபெரும் கடத்தல் நெட்வொர்க்கை நடத்தி வருகின்றனர்.

இதற்காகக் கலிக்க நாயக்கன்பட்டி வேல்ஸ் கார்டன், அமரபூண்டி ரோடு ஹயக்ரீவர் மெட்ரிக் பள்ளி அருகே தனி இடம் வாங்கி, குடோன் செட்டப் அமைத்து பிக்கப் வேன்கள் மூலம் திருட்டுப் பொருட்களைப் பதுக்கி வைத்து விநியோகிக்கின்றனர்.

ரூ.8,500-க்கு வாங்கி ரூ.12,500-க்கு விற்பனை:

நெடுஞ்சாலையில் லாரிகள் எந்த நேரத்தில் வரும் என்ற தகவல்களை முன்கூட்டியே அறிந்து, சில லாரி ஓட்டுநர்களின் உதவியுடன் தார் மற்றும் டீசலைப் பேரல்களில் உறிஞ்சி எடுக்கின்றனர்.

ஒரு பேரல் தாரை ஓட்டுநர்களிடம் ₹8,500-க்கு கமிஷன் கொடுத்து வாங்கி, வெளிச்சந்தையில் ₹12,500-க்கு விற்று நாள்தோறும் பல லட்சம் ரூபாய் முறைகேடான லாபம் ஈட்டி வருகின்றனர். தினமும் 30 முதல் 40 லாரிகளில் இந்தத் திருட்டு நடப்பதாகத் தெரியவந்து உள்ளது.

ஆயக்குடி போலீஸ் மீது குற்றச்சாட்டு:

பொதுமக்களும் தன்னார்வலர்களும் இது குறித்துப் புகாரளித்தால், "இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது ? உங்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ?" என்று ஆயக்குடி போலீஸார் சாக்குப்போக்கு சொல்லி வழக்குகளைத் தட்டிக்கழிப்பதாக அப்பகுதி மக்கள் கொந்தளிக்கின்றனர். மாதாந்திர 'மாமூல்' பேரம் காரணமாகவே போலீஸார் கண்மூடி அமைதி காப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

முதலமைச்சருக்குப் புகார் அனுப்ப எச்சரிக்கை:

தேசிய அளவில் விநியோகிக்கப்படும் அரசுக்குச் சொந்தமான தார் மற்றும் டீசலைக் கொள்ளை அடிக்கும் இந்தச் சட்டவிரோத கும்பல் மீது மாவட்டக் காவல்துறை உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், இச்சம்பவம் குறித்துத் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுக்கு நேரடியாகப் புகார் அனுப்பப்படும் எனத் தன்னார்வலர்களும் சமூக ஆர்வலர்களும் எச்சரித்து உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: