புதன், 19 ஆகஸ்ட், 2026

"பசுமாட்டைக் கோபத்தோடு பாய்ந்து தாக்கப் பார்த்த காட்டு யானை" - கோவையில் நடுங்க வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள்!

SHARE

 "பசுமாட்டைக் கோபத்தோடு பாய்ந்து தாக்கப் பார்த்த காட்டு யானை" - கோவையில் நடுங்க வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள்!

 கோவை, தடாகம் பகுதியில் நள்ளிரவில் புகுந்த ஒற்றைக் காட்டு யானை ஒன்று, அங்கு நின்று இருந்த பசுமாட்டைக் கொடூரமாகத் தாக்க முயன்ற சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் ஆழ்த்தி உள்ளது.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளான மாங்கரை, தடாகம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் மற்றும் சோமயனூர் ஆகிய கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

​கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, தடாகம் பகுதியில் இருந்த ஒரு தனியார் ஹோட்டல் கடையின் சட்டரைத் தட்டிச் சேதப்படுத்திய சி.சி.டி.வி காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், அதே ஒற்றை யானை நேற்று இரவும் திருவள்ளுவர் நகர் மற்றும் குன்று பெருமாள் கோவில் ஆகிய குடியிருப்புப் பகுதிகளுக்குள் ஊடுருவி உள்ளது.

​அப்போது, தெருவில் நின்று கொண்டு இருந்த பசுமாடு ஒன்றை நோக்கி அந்த யானை கோபத்துடன் பாய்ந்து ஆக்ரோஷமாகத் தாக்க முயன்றது.

 நல்வாய்ப்பாக, ஆபத்தை உணர்ந்த பசுமாடு நொடிப் பொழுதில் விலகிச் சென்றதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு உயிர் தப்பியது.

அதன் பின்னர், திருவள்ளுவர் நகரில் உள்ள பெட்ரோல் பங்க் பகுதிக்கு வந்து நின்ற யானையைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊர்மக்களும், ரோந்தில் ஈடுபட்ட வனத்துறையினரும் இணைந்து சத்தம் எழுப்பியும் மேளங்கள் கொட்டியும் யானையை வனப்பகுதியை நோக்கி விரட்டி அடித்தனர்.

கடந்த சில நாட்களாகவே குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து ஹோட்டல்களைச் சேதப்படுத்துவது, கால்நடைகளைத் தாக்க முயல்வது எனத் தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் இந்த ஒற்றைக் காட்டு யானையைத் கும்கி யானைகளின் உதவியோடு அடர்வனப் பகுதிக்குள் நிரந்தரமாக விரட்ட வேண்டும் என்றும், மீண்டும் அது கிராமங்களுக்குள் வராதவாறு வனத்துறை தீவிர ரோந்துப் பணிகளைச் மேற்கொள்ள வேண்டும் என்றும் தடாகம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: