பெங்களூரு சென்றிருந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை: வெரைட்டி ஹால் போலீசார் தீவிர விசாரணை!
கோவையின் மிக முக்கிய மற்றும் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் ஒப்பனக்கார வீதியில், ஓய்வுபெற்ற ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்துச் சுமார் 100 கிலோ எடையிலான வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்று உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
கோவை, ஒப்பனக்கார வீதி வணிக நிறுவனங்களும், மக்கள் நடமாட்டமும் நிறைந்து 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கக் கூடிய மண்டலமாகும். இந்தப் பகுதியில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற ஆடிட்டர் சேஷகிரி. இவர் பெங்களூரில் வசித்து வரும் தனது மகனைப் பார்ப்பதற்காகக் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டைப் பூட்டி விட்டுச் சென்று உள்ளார்.
மகன் வீட்டில் ஒரு மாதம் தங்கி விட்டு, மீண்டும் கோவை திரும்புவதற்காக இன்று காலை தனது வீட்டிற்கு வந்து உள்ளார்.
வீட்டின் முன் கதவை அணுகிய போது, அதன் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு சேஷகிரி கடும் அதிர்ச்சி அடைந்தார். பதற்றத்துடன் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அங்கு இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த சுமார் 100 கிலோ எடையிலான வெள்ளிப் பூஜை பொருட்கள் மற்றும் பல்வேறு விலைமதிப்பற்ற பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
வீடு பூட்டப்பட்டு இருந்ததை மோப்பம் பிடித்த கொள்ளையர்கள், திட்டமிட்டு இந்தத் துணிச்சல் கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர்.
இது குறித்து சேஷகிரி உடனடியாக வெரைட்டி ஹால் சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுத் தடயங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், ஒப்பனக்கார வீதியில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி (CCTV) கேமரா காட்சிகளைக் கைப்பற்றி, கொள்ளையர்களைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒப்பனக்கார வீதியில், 100 கிலோ வெள்ளிப் பொருட்களைக் கொள்ளை அடித்துச் சென்ற இச்சம்பவம் கோவை மக்கள் இடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற சூழலையும் உருவாக்கி உள்ளது.

0 கருத்துகள்: