வெள்ளி, 4 செப்டம்பர், 2026

"கோயிலுக்குள் மொபைல் தடைக்கு எதிர்ப்பு" ; சிவசேனா கட்சி கண்டனம் - அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும் என எச்சரிக்கை!

SHARE


"நாளை கோயிலுக்கு வராதீர்கள் என்பார்கள்": மேட்டூர் அணை திறப்புச் செலவுக்கும் திருமுருக தினேஷ் கடும் எதிர்ப்பு!

 கோயில்களுக்குள் ஸ்மார்ட்ஃபோன் கொண்டுவரத் தடை விதித்து உள்ள இந்து சமய அறநிலையத் துறையின் உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இதுபோன்ற கட்டுப்பாடுகளால் பக்தர்கள் கோயிலுக்கு வருவது பெருமளவு குறையும் என்றும் சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் திருமுருக தினேஷ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் திருமுருக தினேஷ் பேசுகையில்:

"இந்து சமய அறநிலையத் துறை கோயில்களுக்குள் ஸ்மார்ட்ஃபோன்களைக் கொண்டுவரக் கூடாது என அறிவித்துள்ளது ஏற்கத்தக்கதல்ல. மதுரை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்லக் கூடாது என்று கூறப்படவில்லை, மாறாகச் சமூக வலைதளங்களுக்காக 'ரீல்ஸ்' (Reels) மற்றும் புகைப்படங்கள் எடுப்பதை மட்டுமே தடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது.

ரீல்ஸ் எடுப்பதைத் தடுப்பதற்காகவே பிரத்யேக சிறப்பு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், உண்மை நிலை என்னவென்றால் அந்தச் சிறப்பு கண்காணிப்பாளர்களுக்குக் கூட அரசு முறைப்படி சரிவரச் சம்பளம் வழங்குவதில்லை" என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், *"தற்போது பெரும்பாலான கோயில்களில் நன்கொடை செலுத்துவது, அன்னதான நிதி வழங்குவது மற்றும் சிறப்பு பூஜைகளுக்கான கட்டணங்களை பக்தர்கள் தங்கள் ஸ்மார்ட்ஃபோன் மூலம் 'கியூ ஆர் கோட்' (QR Code) முறையிலேயே செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதை முற்றிலும் தடை செய்தால், பக்தர்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது தடைபட்டு அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருமான இழப்பு ஏற்படும். எனவே, செல்போன் தடையை அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்"* என வலியுறுத்தினார்.

"தமிழக அரசு மக்களுக்கு நல்லது செய்வதாகக் கூறிக் கொண்டு தொடர்ந்து பல்வேறு இடையூறுகளையே ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் மேட்டூர் அணையைத் திறப்பதற்குக் கூட மக்களின் வரிப்பணத்தை மிக ஆடம்பரமாகச் செலவு செய்து உள்ளனர். இதற்குச் சிவசேனா சார்பில் மாபெரும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  

ஏற்கனவே இருக்கும் திட்டங்களைக் கைவிட்டுவிட்டுப் புதிய திட்டங்களை அரசு கொண்டு வர வேண்டும். கோயில் ஊழியர்களுக்கு முறையான சம்பளத்தை முதலில் வழங்க வேண்டும். இன்று கோயிலுக்கு மொபைல் போன் கொண்டு வராதீர்கள் என்பவர்கள், நாளை கோயிலில் வசூல் இல்லை என்று கூறி கோயிலுக்கே வராதீர்கள் என்று சொல்லும் நிலை வந்து விடக் கூடாது" என எச்சரிக்கை விடுத்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: