வெள்ளி, 4 செப்டம்பர், 2026

"வெயிலின் கொடுமையால் குட்டையில் இறங்கிய யானைகள்" ; நீராடி மகிழ்ந்த காட்டு யானைகள் - வீடியோ வைரல்!

SHARE

பயிர்களைச் சேதப்படுத்திச் சென்றதால் விவசாயிகள் கவலை: வனப்பகுதிக்குள் விரட்டப் பொதுமக்கள் கோரிக்கை!

 கோவை மாவட்டம், காரமடை அருகே நிலவும் கடும் வறட்சி மற்றும் வெயிலின் தாக்கத்தைத் தணிப்பதற்காக, இரு காட்டு யானைகள் குட்டையில் நீண்ட நேரம் நீராடி மகிழ்ந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கோவை மாவட்டம், காரமடையை அடுத்து உள்ள வெள்ளியங்காடு பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள், சிறுத்தைகள், கரடிகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

நடப்பு தென்மேற்குப் பருவமழை கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொய்த்துப் போனதால், வனப்பகுதிக்குள் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, தண்ணீருக்காகவும் உணவிற்காகவும் வனவிலங்குகள் அடிக்கடி அருகில் உள்ள கிராமப்புறங்களுக்குள் ஊடுருவி வருகின்றன.

இந்நிலையில், நேற்று காரமடை வனச்சரகப் பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள், வெள்ளியங்காடு பகுதியில் உள்ள குட்டைக்கு வந்து உள்ளன. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், அந்த யானைகள் குட்டை நீருக்குள் இறங்கி நீண்ட நேரமாகக் குளித்து மகிழ்ந்து உள்ளன.

இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், யானைகளை அங்கு இருந்து விரட்டுவதற்காகச் சப்தமிட்டனர். சப்தம் கேட்டு மெதுவாகக் குட்டையிலிருந்து வெளியேறிய இரு யானைகளும், அருகில் இருந்த விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்திய பின்னரே மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றன.

காட்டு யானைகள் குட்டையில் இறங்கி நீராடிய இந்த அரிதான காட்சியை அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவிட்டு இணையத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இருப்பினும், கிராமப் பகுதிகளுக்கு மிக அருகிலேயே உள்ள குட்டையில் யானைகள் நீண்ட நேரம் முகாமிட்டு இருந்ததால் வெள்ளியங்காடு பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உறைந்து உள்ளனர். எனவே, வனவிலங்குகள் வன எல்லையைத் தாண்டி ஊருக்குள் வராதவாறு வனத்துறையினர் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: