ஞாயிறு, 17 மே, 2026

இலங்கை தமிழர் இனப்படுகொலை நினைவேந்தலை தமிழக அரசே நடத்த வேண்டும் - திருமுருகன் காந்தி !!!

SHARE

 இலங்கை தமிழர் இனப்படுகொலை நினைவேந்தலை தமிழக அரசே நடத்த வேண்டும் - திருமுருகன் காந்தி !!!

இலங்கைத் தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வை தமிழக அரசே நடத்த வேண்டும் என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "புதிதாக பொறுப்பேற்று உள்ள தமிழக முதலமைச்சர் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றும் அமைச்சரவை உறுப்பினர்களிடம் எங்கள் முதற்கட்ட கோரிக்கைகளை முன் வைப்பதற்காக இந்த ஊடக சந்திப்பு நடத்தப்படுகிறது.

முழுமையான அமைச்சரவை அமைந்த பிறகு மக்கள் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் முன் வைக்க இருக்கிறோம். தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிக்கு எங்கள் ஆதரவு தொடரும். 2009-ஆம் ஆண்டு இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தமிழர் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை தொகுத்து வெளிக்கொணருவதில் மே 17 இயக்கம் முக்கிய பங்கு வகித்தது.

கடந்த 17 ஆண்டுகளாக, ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சர்வதேச அரங்குகளில் மே 17 இயக்கம் தொடர்ந்து முன் வைத்து வருகிறது. ஆனால், இதுவரை தமிழகத்தில் இருந்து இந்திய அரசுக்கோ அல்லது சர்வதேச அமைப்புகளை நோக்கியோ போதிய அரசியல் அழுத்தம் தரப்படவில்லை.

மேலும், 2009-ஆம் ஆண்டு இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சியை தமிழக அரசே அதிகாரப் பூர்வமாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். இலங்கையில் உயிரிழந்த தமிழர்களுக்காக தமிழக அரசு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறோம்.

இனப்படுகொலை நிகழ்த்தப்பட்ட தினத்தை தமிழ்நாடு அரசு அதிகாரப் பூர்வமாக இனப்படு கொலை நாள் என அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் இதுகுறித்து குரல் எழுப்பவில்லை எனில் வேறு யார் பேசுவார்கள் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வி.சி.க சட்டமன்றக் குழுத் தலைவர் வன்னி அரசு, ஈழத் தமிழர்களுக்காக இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் மற்றும் இனப்படு கொலை நாளை அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மேலும், மத்தியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆட்சியில் இருந்த போதும் தமிழர்களுக்கு ஆதரவான உறுதியான நிலைப்பாடு எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக, தேவைப்பட்டால் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்த தயாராக இருக்கிறேன்.

இலங்கை இனப்படு கொலையின் போது உயிரிழந்த ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கான 17-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நாளை (இன்று) மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது" என்று தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: